Wednesday, December 9, 2009

க.மு.....க.பி....

கி.மு..கி.பி.. தெரியும். அது என்ன க.மு..க.பி..என்று யோசித்து பதட்டப்பட வேண்டாம்.மேலே தொடர்ந்து படிங்க..புரியும்.

சென்ற வாரத்தில் ஒருநாள்,என் தோழிகளை சந்திக்க,நான் முன்பு தங்கியிருந்த விடுதிக்கு சென்றிருந்தேன்.மூன்று மாதங்களுக்கு முன்பு நான் வெளியே கிளம்பியதற்கும்,அன்று நான் விடுதிக்கு கிளம்பியதற்கும் வேறுபாடு இருக்கிறதே...அப்பப்பா வித்தியாசங்கள் 6 என்ன அறுபதையும் தொடும்.அதனாலதான் நிறைய பேருக்கு கல்யாணம்னா அலர்ஜியாகிடுது போல..
இப்போ தலைப்பு புரியும்னு நினைக்கிறேன்.இன்னும் புரியலைனா, உங்களுக்கு வெள்ளேந்தி மனசுதான் போங்க..

சரி விசயத்திற்கு வர்ரேன்.க.மு எல்லாம், ஒரு இடத்திற்கு கிளம்புகிறேன் என்றால், நான் என்னை மட்டுமே கவனித்து அழகு படுத்தி கொண்டு, ஒரு பில்டப் போட கிளம்புவேன்.இருக்கும் அறையை பற்றிய அக்கறை சிறிதும் இருக்காது.போட்டது போட்ட மாதிரியே கிடக்கும்.வெளியே போய்விட்டு வந்துதான் அறையை ஒழுங்குபடுத்துவேன்(அட..நம்புங்கப்பா!!)

ஆனா, இப்ப அப்படி இருக்க முடியுதா என்ன..ஜன்னல் சாத்தியாச்சா?,கேஸ் ஆஃப் பண்ணியாச்சா?,பைப் எல்லாம் சரியா பூட்டி இருக்கா?,காயப்போட்ட துணிய எடுத்தாச்சா..வெளில போயிட்டு வந்ததும் சாப்பிடுறதுக்கு செஞ்சாச்சா? ..இப்படி நிறைய..(இதெல்லாம் தங்கராசாக்கல்லாம் யோசிக்கமாட்டாங்க போல)

அந்தா இந்தான்னு யோசிச்சு ஒரு 11 மணி போல விடுதிக்கு கிளம்புனேன்.தங்கராசுக்கும் ஒரு மீட்டிங் இருந்ததால,மதியம் வெளிலேயே சாப்பிட்டுகிறதா சொல்லி, காலைல கிளம்பிட்டாப்புல.”ரொம்ப சந்தோசம் மதிய சமையல் செய்யவேண்டாம்” அப்படின்னு பஜ்ஜி மட்டும் செய்து எடுத்துக்கொண்டு, விடுதிக்குள் போய் காலை வைக்கிறேன் ஒரு போன்கால்.வேற யாரு தங்கராசுதான்.

“எங்கப்பா இருக்குற”

“இப்பதான் ஹாஸ்டலுக்குள்ள நுழையிறேன்.ஏங்க என்ன விசயம்?”

“ஒண்ணுமில்லை..சரி..நான் அப்புறம் கூப்புடுறேன்”

அடப்பாவிமக்கா..அப்புறம் கூப்புடுறேன்னு சொல்றதுக்கு ஒரு போன்காலா...
சரின்னு வார்டன் கிட்ட பெர்மிசன் வாங்கிட்டு,என்னுடைய பழைய அறையை நோக்கி மெல்ல நகர்ந்தேன்.இந்த இடத்துல “ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..” பாட்ட நீங்க ஹம் பண்ணிக்கணும்..

அது என்னவோ தெரியல,என்ன மாயமோ தெரியல, ஃப்ரண்ட்ஸ்ஸ பார்த்தா மட்டும் அரட்டை அருவி மாதிரி கொட்டுது.இந்த “கடலை”,”மொக்கை” போன்ற வார்த்தைகளுக்கான அர்த்தங்களை எல்லாம் அன்றுதான்(ஹி ஹி அன்றும்னே வச்சுக்கோங்க)மெய்பித்தோம் ,அரட்டை மூலமாக.சிறிது நேரம் கழித்து, படம் ஏதாவது பார்க்கலாம் என்று முடிவு செய்து “மின்னலே” போட்டுவிட்டோம் லேப்டாப்பில்.


மறுபடியும் போன்.மறுபடியும் தங்கராசு.
“என்னங்க?”

“மீட்டிங் முடிஞ்சிடுச்சு ..நான் வந்துகிட்டே இருக்கேன்.உன்ன ஹாஸ்டல்ல வந்து பிக்கப் பண்ணிக்கரட்டா?”

“இல்ல..நான் அப்புறமா வர்ரேன் .நீங்க வீட்டுக்கு போயிடுங்க”

“சரி..வீட்டுல சாப்பாடு இருக்குல லஞ்சுக்கு?”

“அய்யோ .இல்லியே..வெளில சாப்பிட்டுகிறதா சொன்னீங்க”

“ப்ளான் மாறிடுச்சு.சரி நான் செய்து சாப்பிட்டுக்றேன்..நீ அங்க மறக்காம சாப்பிட்டுக்கோ...பை”

இதுக்கு அப்புறமும் படம் பார்க்க முடியுமா சொல்லுங்க..அவசர அவசரமாய் வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானேன்.கண்டிப்பாக சாப்பிட்டுதான் போகணும்னு தோழிகள் கூற(பழி வாங்கனும்னா வேற வழியே தெரியல போல),வேறு வழி இன்றி சாப்பிட ஆரம்பித்தேன்.கடவுளே...போஸ்டருக்கு ஒட்டுற மாதிரி இருந்த வெண்டைக்காய் மோர்க்கொழம்பை ஒரு கவளம் கூட வாயில் வைக்க முடியவில்லை.கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்து ,அனைவருக்கும் ஒரு பை சொல்லிவிட்டு,விடுவிடு வென்று வீட்டிற்கு வந்தால் ..ஆஹா கம கம வென்று ஆம்லெட் வாசம்.தயிர் தாளித்து, ஆனியன் போட்டு ஆம்லெட் செய்து, சாப்பிட தயாராகிக்கொண்டிருந்தார் தங்கு.ஆயிரம் தான் சொல்லுங்க..வெளில எவ்வளவோ சாப்பிட்டாலும், வீட்டுல சாப்பிடுற சாதம் ஒரு தனி ருசிதான் போங்க(ஹி ஹி..நாம சமைக்காம இருந்தா!)

Sunday, December 6, 2009

டிசம்பர் 7- கொடிநாள்- ஒரு பார்வை...

டிசம்பர்-7 , கொடிநாள். இந்திய மக்களின் நலனுக்காக, நாட்டின் எல்லையில் காவல் புரியும், ஆயுதம் தாங்கிய முப்படை வீரர்களுக்குமான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கும் நாள்.

சுதந்திர இந்தியாவிலே, 1949 ஆம் வருடம் ஆகஸ்ட் திங்கள் 28 ஆம் தேதி, இந்திய தற்காப்பு பிரிவின் கீழ் , ஒரு கமிட்டி அமையப்பெற்றது. அக்கமிட்டியின் கொள்கைப்படி, நாட்டிற்கு சேவை புரியும் முப்படை வீரர்களுக்கு , அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் பொருட்டும், அவர்களின் சேவையை பாராட்டி நன்றி தெரிவிக்கும் பொருட்டும், ஆண்டுதோறும் டிசம்பர் 7 ஆம் தேதி , பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி இக்கொடிநாள் கொண்டாடப்படுகிறது.

கொடியின் வரலாற்றை நினைவில் நிறுத்தவும், முக்கியமாக நாட்டின் எல்லையை காக்கும் படை வீரர்களின் குடும்பங்களை, பாதுகாப்பது நம் கடமையும் பொறுப்பும் ஆகும், என்பதை பொதுமக்களிடம் வலியுறுத்தவுமே, அவர்களிடம் இருந்து நிதி திரட்டும் முறை உருவாக்கப்பட்டது.

இந்நிதியில் இருந்து வரும் பணத்தை, போர்க்கள புனர்வாழ்விற்கும், படைவீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், ஓய்வுபெற்ற வீரர்களின் ஊதியத்திற்கும், உபயோகப்படுத்தப்படுகிறது.

நாடெங்கும் திரட்டப்படும் நிதியை, நிர்வகிக்கும் பொறுப்பு KSB(Kendriya Sainik Board) ஐ சார்ந்ததாகும். பல தொண்டு நிறுவனங்களும் , பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளனர். டிசம்பர் 7, நாமும் நிதியளிப்போம் நம்மை பாதுகாக்கும் நம் படை வீரர்களுக்காகவும் ,அவர்களின் குடும்பங்களுக்காகவும்.(மறக்காம கொடிய வாங்கிக்கோங்க...)


Monday, November 23, 2009

என்ன கொடுமை சரவணா இது!!!

நேற்றைக்கு முன்தினம், ரமணா பட அனுபவம் போல எனது நண்பருக்கு ஏற்பட்டது. அவர் இருப்பது அடையார் . வியாழன் அன்று அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் மிகவும் அதிகமாகவே, அவர் உடனே பதறி போய், அங்கிருக்கும் ஒரு புகழ் பெற்ற மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் . அவரை சோதித்த மருத்துவர்கள் ,அவரை உடனே பெட்டில் அட்மிட் செய்திருக்கின்றனர் . அவரும் கேஷ்லெஸ் கார்டு வைத்திருந்ததால், பெரிய மருத்துவமனை என்ற பயம் இன்றி அட்மிட் ஆகி இருக்கிறார்.
சாதாரண காய்ச்சலுக்கு , X-Ray, ஸ்கேன் போன்ற இத்தியாதி அயிட்டங்கள் எடுக்கப்பட்டன. அடுத்த நாள் , அவர் கிளம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு மருத்துவர்கள், ”ஒரு நாளிற்கு மேல் தங்கி இருந்தால்தான் கார்டு யூஸ் பண்ண முடியும் ” என்று கூறிவிட்டார்கள். சரி என்று அவரும் வேறு வழி இன்றி ,அங்கேயே தங்கி விட்டார். அடுத்த நாள் கிளம்பும் வேளையில் , வந்தது பில் . மொத்தம் பன்னிரெண்டாயிரத்து சொச்சம்.
அட கடவுளே! அதான் பணம் க்ளைம் பண்ணியாச்சே என்றால்,” பணம் க்ளைம் பண்ணியது ரிஜெக்ட் ஆகிவிட்டது ”என்று கூறியிருக்கிறார்கள். என்ன என்று இன்ஷூரன்ஸ் கம்பெனியிடம் விசாரித்தால், "இம்மாதிரியான நோய்களுக்கு ,அதாவது சாதாரண காய்ச்சலுக்கு பெட்டில் அட்மிட் ஆக வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தினால் ரிஜெக்ட் செய்யப்படிருக்கிறது"என்று கூறியிருக்கிறார்கள்.
நண்பருக்கு தலை சுற்றி விட்டது. எவ்வளவோ பேச்சு வார்த்தை நடத்திய பின்னும் அவர் , பணம் கட்டியே ஆக வேண்டும் என்று கூறிவிட்டனர். வேறு வழி இன்றி , அவர் அங்கே பணத்தை அழுதுவிட்டு வந்தார். சாதாரண காய்ச்சல் காஸ்ட்லி காய்ச்சல் ஆகிவிட்டது.
அவருடைய பில்லை வாங்கி பார்த்தேன்.எனக்கு நிறைய சந்தேகங்கள்.
1)ஏங்க ஒருநாள் ரூம் வாடகை 2500ஆ!! அதுவும் ஏசி இல்லாமல்??. ஸ்டார் ஹோட்டெல்ல கூட அவ்வளவு கிடையாதே!!
2) முதலில் தவறாக எடுத்துவிட்டோம் என்று இரண்டு தடவை X-Ray எடுத்து இருக்கிறீர்கள். அது உங்களது தவறு. அதற்காக ஏன் இரண்டு தடவை பில் போட்டு இருக்கிறீர்கள்??
3)ஏங்க, இந்த மாதிரியான சாதாரண காய்ச்சலுக்கு பெட்டில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்ற அடிப்படை கூட உங்களுக்கு தெரியாதா? தெருமுக்குல சின்ன கிளினிக் வச்சிருக்குற டாக்டர் கூட சொல்லிருவாறே!!
4)கேஷ்லெஸ் கார்டுக்கு கிளைம் பண்ணி ,ரிஜெக்ட் ஆகி வந்த தொகை 30,000என்று எழுதியிருக்கிறது. ஆனால் கட்ட வேண்டிய தொகை என்று 12,000 வசூலிக்கப்பட்டது. எப்படீங்க இப்படியெல்லாம் ??.
இனிமே ,மருத்துவமனைக்குன்னு போகனுமுனா கொஞ்சம் யோசிச்சிட்டுதான் போகணும் போல இருக்கு.
...............................................................................................................................................................................
இந்த பதிவு சப்புனு போயிடக்கூடாது பாருங்க..அதனால காரமா ஒரு விசயம் சொல்றேன் கேளுங்க.சென்ற வாரம் சன் பிக்சர்ஷின் “கண்டேன் காதலை” படம் பார்த்தேன். ஒரு தடவை பார்க்கலாம். அதில் , தமன்னா விருத்தாச்சலம் தொகுதியில், , சாரிங்க , பகுதியில் இறங்கும் போது, ஒரு மொட்டை பாஸ் , பைக்கில் வந்து கூப்பிடுவானே.. அந்த குரல எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.. ..கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு கப்பல் பரிசளிக்கபடும்.

Wednesday, October 28, 2009

பிறந்தநாள்- வாழ்த்துக்களும்,முக்கியத்துவமும்


இன்றைய சூழலில் ,பிறந்த நாள் கொண்டாடுவதென்பது ஒரு தவிர்க்க முடியாத சிறு நிகழ்வாகி போய்விடுகிறது. சிறு குழந்தை முதல் முதியவர் வரை, தன்னுடைய பிறந்த நாளை விரும்பாதவர் யாரும் இலர். இதில் சில விதி விலக்குகளும் உண்டு.

பள்ளி பிராயத்திலே, பிறந்த நாள் என்பது புது படம் ரிலீஸ் ஆவது போல.சீருடைக்கு விடுமுறை கொடுத்து ,வண்ண ஆடையை அணிந்து , கையில் ஒரு பெரிய டப்பாவில் அப்பா வாங்கி கொடுத்த நுயுட்ரின் சாக்லேட்டை கொண்டு போய் வகுப்பு ஆசிரியருக்கு கொடுத்து விட்டு , முதல் பீரியடில் பிறந்த நாள் வாழ்த்து பாடலை கேட்டு விட்டு , கோயிலில் பூசாரி பிரசாதம் கொடுப்பது போல் டப்பாவை ஏந்தி கொண்டு அனைவருக்கும் சாக்லெட் கொடுத்தால்தான் , ஒரு தேவதை போன்ற எண்ணம் மனசுக்குள் தோன்றும்.இதில் மற்றொரு சுகம் என்னவென்றால் ,முடிந்த மட்டும் அன்று முழுவதும் எந்த ஆசிரியரும் அடிக்க மாட்டார்கள்.அதற்காகவே இரண்டு தடவை பிறந்த நாள் கொண்டாடுபவர்களும் உண்டு . என்ன வென்று கேட்டால் "அன்று சர்டிபிகேட் படி, இன்று ஜாதகப்படி " என்பர். இதிலும் அன்றைக்கு அம்மாவிடம் அடம்பிடித்து வாங்கி வந்த காசில் தன்னுடைய நெருங்கிய நண்பனுக்கு( எதுக்கு வம்பு நண்பிக்கும்) பை ஸ்டார் சாக்லேட்டோ ,டேய்ரீ மில்க் சாக்லேட்டோ கண்டிப்பாக உண்டு.

கல்லூரி பிறந்த நாள் விழாக்களை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. சாக்லெட் எல்லாம் ஓல்ட் டைப். குரூப் ட்ரீட் என்று, பேக்கரியிலோ, காபி ஷாப்பிலோ , அப்பாவின் பணம் திவால் ஆகும் .பரீட்சை நேரம் பிறந்த நாள் வந்து விட்டால், ஒன்று எக்சாமை போஸ்ட்போண்டு பண்ணுவார்கள் அல்லது பிறந்த நாளையே போஸ்ட்போண்டு பண்ணி விடுவார்கள். ஆக மொத்தம் அன்று மட்டும் ஒரு குட்டி கதாநாயகன் கதாநாயகி ஆகிவிடுவார்கள்.

வேலைக்கு செல்பவர்களை எடுத்துகொண்டோமானால் , பாதி பேர் பிறந்த நாளை மறைத்து விடுவர். "எதுக்கு தேவை இல்லாமல் வெட்டி செலவு" என்று. "ஆனாலும் விடமாட்டோம்" என்று நண்பர்கள் ஊரெல்லாம் தமாரம் அடித்து விடுவதும் உண்டு. ஆனபோதும் ,திருமணத்திற்கு முன்னால் , வேலைக்கு செல்லும் பலருக்கு தத்தம் பிறந்த நாள்களின் போது, சிறு வலி இருக்கும்.குடும்பத்தினருடன் இல்லாமல் இருப்பது, கல்வி கடன், உயர் பதவி மற்றும் வேலைக்களுக்கான அலைச்சல் என்று பல. பள்ளியிலும் கல்லூரியிலும் கொண்ட மகிழ்ச்சி சிறிதாக ,சிலருக்கு பெரிதாக குறைந்திருக்கும்.


இவ்வாறு வருடத்துக்கு ஒரு நாள் மட்டும் வரும் (சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட) பிறந்த நாளின் மகிழ்ச்சி என்பது எப்பொழுதும் நிரந்தரமான ஒரே அளவாய் இருப்பதில்லை.ஆழ்ந்து கவனித்தோம் என்றால் பள்ளியிலும் கல்லூரியிலும் கொண்டாடப்படும் பிறந்த நாள் ,தன்னை முன்னிருத்தியே இருக்கும். அதன் பிறகு வருபவை 80 சதவிகிதம் நண்பருகளுக்காகவோ, குடும்பதினர்களுக்காகவோ இருக்கும்.


பக்குவப்பட்ட சிலர் தான்,தன்னுடைய பிறந்த நாளை,மற்றவர்களுக்காக உபயோகப்படுத்தி கொள்வார்கள்.கண்தானம் செய்வது, அநாதை இல்லம் சென்று உணவு கொடுப்பது , வீட்டில் இருக்கும் முதியவர்களின் ஏதாவது ஒரு ஆசையை நிறைவேற்றுவது என்று பல.அதிலே தனி சுகமும் ஆத்மா திருப்தியும் உண்டு.

நண்பர்களே!! நாமும் நம்முடைய பிறந்த நாளை பயனுள்ள முறையில் கொண்டாடுவோம் ..நம்மை சுற்றி உள்ளவர்களுக்காக.!!!


நாளை பிறந்த நாள் காணும் என் அன்பு கணவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!. எண்ணிய எண்ணம் யாவும் இனிதே துலங்க ,இதயத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துகிறேன் !!.


Saturday, October 24, 2009

புதிதாய் ஓர் ஆரம்பம்...

கடந்த ஒரு மாத காலமாய் , காலையில் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்ற முடிவும் முயற்சியும் ,பல தடங்கலுக்கு பிறகு ,ஒருவழியாய் நேற்றில் இருந்து அமுலுக்கு வந்துவிட்டது. மாசற்ற, காலை காற்றை சுவாசிப்பதென்பதே ஒரு சுகம்தான்.அதிலும் அமைதியான வேளையில் என்கின்றபோது, உடம்போடு சேர்ந்து மனதும் வலுப்படுவது போன்றதொரு எண்ணம்.

தமிழக அரசு ஆங்காங்கே நிறுவி இருக்கும் பூங்காக்கள்,உடற்பயிற்சி, யோகா போன்ற, நல்ல விசயங்களை வலியுறுத்தும் விதமாக விளங்கி வருகிறது என்றே கூறலாம்.அதன் மூலம் பலர் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை.

வீட்டின் அருகில் இருக்கும் சிவன் பூங்கா ( ஞானி மன்னிப்பாராக!! ஜீவா பூங்கா) எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். நல்ல அகலமாய், காற்றோட்ட வசதியுடையதாய்,தியான மண்டபத்தோடு கூடிய இடம் அது.அங்கே வளரும் செடிகளுக்கான நாற்று பண்ணையும், அதனோடு இணைந்துள்ளது. எனக்கு தெரிந்து ,சென்னையில் கழிப்பிட வசதியோடு அமைந்த ஒரே பூங்கா இதுவாய் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.(பராமரிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி தெரியவில்லை).

காலை 5 மணிக்கு தொடங்கும் மக்களின் உடல் மற்றும் நடை பயிற்சி கிட்ட தட்ட 8.30 மணி வரை தொடர்கிறது . உடல் வளமே முக்கியம் என்பதை இது போன்ற இடங்களில் தெரிந்து கொள்ளலாம். 65 வயது வரையிலும் பயிற்சி செய்கிறார்கள்.இறகுப்பந்து விளையாடுவதற்கும் கூட தனி இடம் உள்ளது.சமீப நாட்களாய் இலவச முறையான யோகாசன பயிற்சியும் அங்கே நடந்து வருகிறது.மக்களும் சரியாக அதை உபயோகப்படுத்தி கொள்கிறார்கள்.இதைதவிர மாலை நேரங்களில் குழந்தைகள் விளையாடுவதற்கேற்ற சறுக்கு மைதான வசதியும் உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திறந்ததாதலால் ஒட்டு மொத்த பராமரிப்பு நன்றாகவே உள்ளது. தொடர்ந்தும் இதே நிலையில் இருந்தால் மகிழ்ச்சிதான்.

பொதுவாக நடை பயிற்சி செய்யும் போது அனைவரும் ஒரே திசையில்தால் நடந்து செல்வோம்.நேற்று நான் நடந்து சென்று கொண்டிருந்த போது ,எதிர் திசையில் இருவர் சென்று கொண்டிருந்தனர்.என்னவென்று பார்த்தால் தீபாரதனையோடு கூடிய பூஜை செய்து சாமி கும்பிட்டு வலம் வந்து கொண்டிருந்தனர்.பக்கத்தில் "இங்கே வழிபாடு கூடாது " என்ற பலகையும் இருக்கிறது.பூங்காவிற்கு எதிரிலேயே காவல் நிலையமும் இருக்கிறது. பாதுகாப்பிற்கும் பஞ்சமில்லை என்னவோ போங்க ..பூங்கா பூங்காவாய் இருந்தால் சரி. .

Saturday, October 3, 2009

நன்றிகளுடன் மீண்டும் நான்...

வாழ்வின் இனிய தருணங்கள் சிலவற்றில் திருமணமும் ஒன்று. அதிலும் பல வருடங்கள் கடந்து நண்பர்களை அத்தருனங்களிலே சந்திப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான ஒன்று. என் அழைப்பிதழை ஏற்று ,எனது திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய நண்பர்களுக்கும், தொலைபேசி வழியாய் வாழ்த்திய நண்பர்களுக்கும், மின்னஞ்சல் மூலம் வாழ்த்திய நண்பர்களுக்கும், சாட்டிங்கில் (தமிழ்ல என்னாப்பா?) வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றிகள் பல .

என்றும் அன்புடனும் நட்புடனும்
ரசனைக்காரி

Sunday, July 12, 2009

நகைச்சுவை கதம்பம்

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நடந்த நிகழ்வு இது.பள்ளி ஆண்டுவிழாவிற்காக, எங்கள் வகுப்பின் சார்பாக ஒரு குடும்ப நாடகம் நடத்துவதாய் ஏற்பாடு செய்தோம். ஒரு வீட்டில் இரு மருமகள்களும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அமைந்த நாடகம் அது. நான் இளைய மருமகளாயும், எனது தோழி சந்திரலீலா எனது கணவனாகவும் நடித்திருந்தோம். நாடக ஒத்திகையெல்லாம் கூட நன்றாக நடந்தது.

விழா நாளன்று ,எனக்கு பெரிதாய் எந்த பயமும் இல்லை ,சேலை அவிழ்ந்து விடக்கூடாதே என்பதைத் தவிர..ஆனால் லீலா மிகவும் பதட்டமாய் இருந்தாள். பேண்ட்டுக்கு மாட்டுவதற்காக கொண்டு வந்திருந்த அவளது கோபக்கார அண்ணனின் பெல்ட்டை தொலைத்துவிட்டாள்.
நாடகம் வேறு ஆரம்பித்துவிட்டது.ஒரு காட்சியில் நானும் எனது அக்காவும்(மூத்த மருமகள்) சண்டையிடும் போது,எனது கணவனான லீலா வந்து என்னை அதட்டி வீட்டினுள்ளே அழைத்துசெல்வது போல் ஒரு காட்சி. அக்காட்சியும் வந்தது.

நாங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்தோம். வேகமாய்(பதட்டமாய்) அங்கே வந்த லீலா, “ படிச்ச பொண்ணு மாதிரியா நடந்துக்குர. வாடி உள்ள” என்று வசனங்களையெல்லாம் சரியாக கூறி, என்னை அழைத்து செல்வதற்கு பதில் என் அக்காவை அழைத்து சென்று விட்டாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பார்த்துக்கொண்டிருந்தவர்களிடையே சலசலப்பும் சிரிப்பும் ஆரம்பமாகியிருந்தது.

நான் பேந்த பேந்த மேடையிலேயே நின்று கொண்டிருந்தேன். ஏற்கனவே இருந்த குழப்பம் தீர்வதற்குள், அடுத்த காட்சிக்கு வந்த என் அக்காவின் கணவனான , என் தோழி ரோஸ்மேரி, கடகடவென்று வசனங்களை ஒப்பித்துவிட்டு, “ வாடி உள்ளே” என்று என் கையை பிடித்து இழுத்தாள். நான் அழுது விடும் குரலில், “ஏய்...உங்கூட நான் வரக்கூடாதுடி” என்று சொல்ல, அனைவரும் ”ஓ” வென்று கத்தி சிரிக்க, நாடகம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் பிரம்படி காலையும் முதுகையும் பதம்பார்க்க,
இனிதே நிறைவடைந்தது நாடகம்.
.........................................................................................................
நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது நடந்த நிகழ்வு இது. ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்மொழிவழி கற்றலில் படித்துவிட்டு , ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலமொழிவழி கற்றலில் , புதுப்பள்ளி ஒன்றில் சேர்ந்தேன்.ஆகவே, அப்போதைய என்னுடைய ஆங்கில அறிவு எப்படி இருக்கும் என்று சொல்ல தேவையில்லை. கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியாக வினாடி வினா ஏற்பாடு ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள்.
கேள்வியும் பதிலும் முன்னமே கொடுக்கபட்டுவிட்டது.யார் கேள்வி கேட்பார், யார் அதற்கு பதில் சொல்லவேண்டும் என்பதையும் ஒத்திகை பார்த்தாயிற்று. நல்ல்வேளையாக நான் ஒரு கேள்விக்கு மட்டும் விடை சொல்வதாய் அமைந்திருந்தது அவ்வினாடி வினா. ஒத்திகை சமயங்களில் எல்லாம் அனைவரும் வட்டமாக அமர்ந்திருந்து பயிற்சி எடுத்தோம். விழா நாளும் வந்தது.

மேடையில் இருபுறமும் இருக்கைகள் போட்டு வினாடி வினா ஆரம்பமானது.மைக்கை என்னிடமிருந்து எட்டு இருக்கைகள் தள்ளி நிறுத்தியிருந்தார்கள். அவ்வளவு தூரம் நடந்து சென்று, பதில் சொல்லவேண்டும் என்று பயமும் தடுமாற்றமும் என்னுள்.பலமுறை என் பதிலை சொல்லிபார்த்துக் கொண்டும், மறந்துவிடக்கூடாதென்று ஆத்தா பராசக்தியையும் வேண்டிக்கொண்டிருந்தேன்.
வினாடி வினா நல்லபடியாக நடந்துகொண்டிருந்தது. மற்ற அனைவரும் தைரியமாக போய், புன்னகைத்தபடியே மைக்கில் கேள்வியும் பதிலும் சொல்லிக்கொண்டிருந்தனர்.பார்த்துக்கொண்டிருந்த எனக்கும் சிறிது சிறிதாக நம்பிக்கை பிறந்தது. நாமும் சிரித்தமுகத்துடன் சென்று பதில் சொல்ல்வேண்டும் என்று முடிவு எடுத்துக்கொண்டேன். எனக்கான கேள்வியை மைக்கின் அருகே அமர்ந்திருந்த என் தோழி கேட்டாள்.

நானும் ஒயிலாக நடந்து சென்று, புன்னகையுடன் எனது பதிலை சொன்னேன். சொன்னதுதான் தாமதம், மொத்த பள்ளியும். சிறப்பு விருந்தினர்களும் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். அட அப்படி என்ன பதில் சொன்னேன் என்று கேட்கிறீர்களா?? “Pass” என்றுதான் சொன்னேன். இதற்கு ஒரு சிரிப்பா!!


Saturday, July 11, 2009

எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி

சமீபத்திய எனது வாசிப்புகளில் , வெம்மையின் உக்கிரத்தை, என்னுள் , எழுத்துக்கள் மூலம் பாய்ச்சிய உணர்வை உண்டாகியது எஸ்.ரா அவர்களின் "நெடுங்குருதி" நாவல். விவசாயம் மறந்த, அனல் விழுங்கும் ஓர் கிராமத்தை "வேம்பலை" எனும் ஊர் மூலம் , பல படிமங்களில் நம் கண் முன்னே விரிய விட்டிருக்கிறார் ஆசிரியர்.

பால்ய நினைவுகளையும் , பாழ்பட்டு போன பல மனித வாழ்க்கைகளையும் , சிதிலடைந்து போன வீடுகளின் வரலாறுகளையும் , பன்முக நுணுக்கமாய் கையாளப்படிருக்கிறது இந்நாவலில். களவே தொழிலாக கொண்ட, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த , ஒரு குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வே , இந்நாவலின் கதை மாந்தராய் விளங்குவது ,ஓர் சிறப்பான அம்சமாகும் .



இரு தலைமுறைகளின் வாழ்வை , கோடைகாலம் , காற்றடி காலம், மழை காலம், பனிக் காலம் என நான்கு நிலைகளில் கோர்க்கப்பட்டிருக்கிறது . வாசிப்பின் இடையே , பல இடங்களில் நிறுத்தி , நாவலின் அப்போதைய நிகழ்வை , கற்பனை செய்து ரசிக்கும்படியாய் உள்ளது. ஒரு சிறு விடயத்தை கூட , அருகே நடக்கும் பிம்பமாய் உரு படுத்தி இருப்பது பிரம்மிப்புக்குரியது.



பல உதாரணங்களை மேற்கோள் காட்டலாம். அவற்றில் ஒன்று சென்னம்மா. பொதுவாக கதைகளில், முக்கிய கதை மாந்தர்கள் பொருட்டு தரும் வருணனை , ஏனோ சுற்றியிருப்பவர்களுக்கு இல்லா சாபமாகிவிடும். ஆனால் நெடுங்குருதியில் சென்னமாவின் பாத்திரம் உலாவும் மணித்துளிகள் சிறிதே ஆனாலும் , அவரைப்பற்றி ஆசிரியர் மூலம் , நம்மில் எழும் பிம்பங்கள் ..அடேயப்பா! வார்த்தைகளில் வரையறுக்க முடியாதவை. தலைமுறை தாண்டியும் அவளை வேம்பலையில் இணைத்திருப்பது ,கதையின் யதார்த்தத்தையும் , ஆசிரியரின் திறனையும் காட்டுகிறது.



நாகுவின் சகோதரிகளாக வரும் நீலாவும் ,வேணியும் வேம்பலையை அழகு படுத்துகிறார்கள். நாகுவின் அய்யா, அம்மா, தாத்தா இவர்களுடைய வாழ்வியல் முறைகள் , இயல்பான கிராமிய மனிதர்களின் நிலைப்பாடு. அதுவும், அய்யா களவிற்கு சென்று விட்டு திரும்பும் போது, கொண்டுவரும் அரிக்கேன் விளக்கும் , அதைப்பற்றிய நிகழ்வுகளும் ,நாமும் அவர்களுடன் வாழ்வதை போன்றதொரு நிலையை ஏற்படுத்துகிறது.


ரத்னாவதியின் வாழ்வு, ஏனோ மனதை நெகிழவைத்து, இறுதியில் நிசப்தத்தை சுவாசிக்க செய்வது போல் இருந்தது. திருமாலின் வாழ்பனுவங்கள் வித்தியாசமான ,ஏக்கத்திற்குரிய குறிப்புகள். வசந்தாவின் நட்பும், திருமண வாழ்வும் கிராமத்து பெண்களுக்கே உரிய ஓடங்கள். இந்நாவலின் ஒவ்வொரு எழுத்துக்களும், உயிர் பெற்று எழுந்து வந்து ,நம் குருதியில் கலந்துவிட்டதைப் போன்ற உணர்வு மேலிடுகிறது.


நாவலைப் படித்த பின்பும், சருகாகிப்போன வேம்பலையை பற்றிய பசுமையான நினைவலைகளும், நாமும் அங்கே வாழ்ந்தோம் என்ற எண்ணமும் ஓங்குகிறது. கோடையின் வெப்பத்தை கூட ரசிக்க வைத்த நாவல் நெடுங்குருதி. தார்ச்சாலைகளில் நடக்கும்போது ஏற்படும் வியர்வைத்துளிகள் கூட வேம்பலையை ஞாபகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.


“கோணங்கி எனும் மாயக்கதையாளன்” எனும் கட்டுரையில் (ஜீன் 2009, உயிர்மை) , கோணங்கி கூறியிருப்பதாய் சில விசயங்களை எஸ்.ரா கூறியிருப்பார். அஃதாவது, “எழுத்தாளன் மண்புழுவைப்போல கிராமத்து மண்ணை தின்று ஊர்ந்து திரிய வேண்டும். இருட்டுக்குள் கால் பின்னப்பட்டு நிற்கும் கழுதையின் மெளனம் புரிய வேண்டும்” என்று. இவையனைத்தும் எஸ்.ராவிற்கு பொருந்துமாகையால், அவருடைய “நெடுங்குருதி” தவிர்க்க முடியாத முக்கியமான நாவலாய் ஆகிவிட்டது.



Monday, June 29, 2009

விடியலை நோக்கிய ஓர் இரவு...

உஷ்ணம் கலந்த, நீண்ட கரிய சாலைகளை, எனது ஸ்ப்ளெண்டர் விழுங்கிக் கொண்டிருந்தது. எத்தனை சிக்னல்களை விதிமுறையின்றி கடந்திருப்பேன் என்பது ஞாபகத்தில் இல்லை. மாலை நேரத்து எதிர்வெயில் ஹெல்மெட்டின் கண்ணாடிக்குள் புகுந்து கண்ணை உறுத்திற்று. மற்ற நாட்களை விட இன்று அதிகமாய் தலையிலிருந்து வியர்வை கசிந்து, காது மடல்களருகே இறங்கி, உப்பு காற்றை நாசியில் தவழவிட்டது.

ஹெல்மெட்டை கழற்றி எறிந்து விடலாமா? என்று கூட ஒரு நொடி யோசித்தேன். “நேற்றாய் இருந்தால் செய்திருப்பாய்” என்று என்னில் இருந்து ஒரு குரல் என்னை ஏளனம் செய்தது. அதுவும் உண்மைதான். நேற்றுவரை நான் Mr.C.ரமேஷ் சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர். ஆனால் இன்றோ C.ரமேஷ் அன் எம்ப்ளாயி.

பெரிய கம்பெனி என்றில்லாத, ஒரு மத்தியதர மென்பொருள் கம்பெனியில் 3 வருடமாக, நாயாய் நேற்றுவரை உழைத்தவன். அதனால்தான் என்னவோ, நாய்க்கு பிஸ்கட் தூக்கியெறிவது போல, பிங்க் ஸ்லிப் கொடுத்து விரட்டிவிட்டனர். நன்றி கெட்டவர்கள்!

சங்கம் தியேட்டர் கடந்தவுடன்,மெதுவாய் வண்டியை வலப்பக்கம் திருப்பி,நேரு பூங்காவின் வாசலருகே ப்ரேக் பிடித்தேன். ரோஸ்நிற கவுன் போட்ட, இரண்டு வயதையொத்த குழந்தையொன்று, கருப்புநிற சுடிதார் பெண்மணியிடம் பலூன் வாங்கித்தரும்படி கெஞ்சிக்கொண்டிருந்தது. வார நாட்களில் கூட கூட்டம் அதிகமாய் இருப்பதாய் தோன்றியது.முடிந்தமட்டும் வண்டியை ஓரமாய் நிறுத்தி பூட்டிவிட்டு, உள்ளே நடக்க ஆரம்பித்தேன்.

இப்பூங்காவிற்கும் எனக்கும் நிறைய உளவியல் தொடர்புகள் இருப்பதாய் இப்பொழுதுவரை நம்பிக்கொண்டிருக்கிறேன். கடந்த ஐந்துவருட சென்னை வாழ்க்கையில், எந்த சூழலில் அமைந்த பிரச்சனை என்றாலும், இங்கு வந்து சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்லும்போது, மனம் தீர்வை நோக்கி ஓட ஆரம்பிப்பதை கவனித்திருக்கிறேன். வேலை தேடிக்கொண்டிருந்த அந்த ஒருவருட கால கட்டம், இப்பூங்காவில் என்னை நானே உணர்ந்த நாட்கள்.அதனால்தான் என்னவோ, என்னையுமறியாமல் என் உள்மனது, இன்று வண்டியை நேராக இங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது.

புல்தரையை ஒட்டிய பச்சைநிற மரப்பெஞ்சில் உட்கார்ந்தேன்.ரோஸ்கவுன் குழந்தை மஞ்சள் பலூனை உதைத்து விளையாடிக்கொண்டிருந்தது. விட்டு அகலா நிழல்போல, மனம் மதியம் நடந்ததையே அசைபோட்டு அலற்றிக் கொண்டிருந்தது.
“மிஸ்டர் ரமேஷ்! கம்பெனியிலிருந்து உங்களை வேலை நிறுத்தம் செய்வதாய் முடிவெடுத்திருக்கிறோம்.ஐ ஆம் ரியலி வெரி சாரி”
இதற்கு முன்னும் பின்னும் நடந்த சம்பாஷணைகளில் மனம் ஏனோ லயிக்கவில்லை. மனதிலிருந்த திட்டங்கள், சந்தோசங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாம் வழிந்தோடிவிட்டது போல் இருந்தது. ரேஸில் தடுமாறி தலை குப்புற விழும் குதிரையை போல இருந்தது இந்நாள்.

வாசலருகே வந்து, இரண்டு ரூபாய் கொடுத்து வாட்டர் பாக்கெட் வாங்கிக்கொண்டேன். நான் செய்வதையே திரும்ப செய்து கொண்டிருக்கும் நிழலை பார்த்தபடியே, நடந்து சென்று, மறுபடியும் பெஞ்சில் அமர்ந்துகொண்டேன்.
இளம்பெண்கள் ஜாகிங் என்ற பெயரில், மற்றவர்களின் மூச்சழுத்தத்தை அதிகப்படுத்திக்கொண்டிருந்தனர். இன்னும் சிலர் முன்னும் பின்னும் வளர்ந்திருந்த தொப்பையின் அளவை குறைக்க குனிந்து நிமிர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். காதலர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூங்காவை அலங்கரித்துக்கொண்டிருந்தனர்.

குழந்தைகள், பச்சை மஞ்சள் நிற பலூன்களை தூக்கிப்போட்டு வண்ணமயமாய் விளையாடிக்கொண்டிருந்தனர். ரோஸ்கவுன் குழந்தை, பலூனின் கயிற்றை பிடித்து எடுக்க போராடிக்கொண்டிருந்தது.ஒவ்வொரு தடவை கயிற்றை பிடிக்க போகும் போதும், பலூன் நழுவிக்கொண்டிருந்தது.

வாட்டர் பாக்கெட்டை பிரித்து, சிறிது குடித்துவிட்டு.மீதியை முகத்தில் பீய்ச்சிக்கொண்டேன். ஊரிலிருக்கும் அம்மா ஞாபகத்திற்கு வந்தாள்.
“ரமேஷு, வசந்திக்கு போட்ட மாதிரியே, சுமதிக்கும் இருபது பவுன் போட்டுரோம்னு சொல்லிருக்கு..மறந்துடாத..”
“என்னம்மா நீ..இதபோயி ஞாபகபடுத்திகிட்டு..எனக்கு தெரியாதா?”
பொங்கலுக்கு வீட்டிற்கு போனபோது அம்மாவிடம் பேசியது மனதை பிசைந்தது. பழைய நினைவுகளில் சிறிது மூழ்க ஆரம்பித்தேன்.

அப்பா செல்லையா.சொந்தமாக சவரகடை வைத்திருந்தார். நாள் வருமானம் 30 ஐ தாண்டுவதே கஷ்டம். அம்மாவும், பாதியிலே படிப்பை விட்ட இரு தங்கைகளும் வயல் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தினர். நான் விடுதியில் தங்கிப்படிக்கும்போது, வீட்டிற்கு செல்லவே கஷ்டமாயிருக்கும். வறுமையின் சுவட்டை வாரி இறைத்ததைப்போல் இருக்கும் வீடு. ஆனாலும் அம்மா எப்பொழுதும் சிரித்த முகத்துடனே இருப்பாள்.
“நீ ஒரு வேலைக்கு போயிட்டேனா எல்லாம் சரியாகிடும்..நீ அதுல மட்டும் கவனமாயிருப்பு” என்று அடிக்கடி சொல்வாள்.

படித்ததும் உடனே வேலையும் கிடைத்துவிடவில்லை. இந்த சிங்கார சென்னை வந்து ,ஒருவருடம் நண்பர்களின் உணவு,உடை,உறைவிடத்தை பகிர்ந்துகொண்டேன்.இப்பூங்காவிற்கு வரவும் பழகியிருந்தேன்.
ரோஸ்கவுன் குழந்தை இன்னும் நழுவிக்கொண்டிருக்கும் பலூனின் கயிற்றை பிடிக்க போராடிக்கொண்டிருந்தது. கருப்பு சுடிதார் ,நழுவிய பலூனை குழந்தையின் அருகே தள்ளிவிட்டுக்கொண்டிருந்தாள். ஏனோ கயிற்றை மட்டும் குழந்தையின் கையில் கொடுக்கவில்லை.

இரண்டாவது வருட ஆரம்பத்தில், ஒரு சாதாரண கம்பெனியில் 6,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்தது. ஒரு வருடமாய் அற்றுப்போயிருந்த தொடர்பை அன்று புதுப்பித்துக்கொண்டேன் வீட்டில். அதற்கு பிறகு நிறைய மாற்றங்கள். குடிசை ஓடானது, குண்டு பல்ப் டியூப் லைட் ஆனது, கொல்லையில் டாய்லெட் கட்டியது, கடையை வாடகைக்கு விட்டு வீட்டில் பசு கட்டியது, வசந்திக்கு வரன் பார்க்க ஆரம்பித்தது என நிறைய...

8 மாதங்களுக்கு பிறகு, அந்த கம்பெனியை விட்டு, இதோ இன்று பிங்க் ஸ்லிப் கொடுத்த கம்பெனியில், ஆரம்ப சம்பளம் 12,000 க்கு மாறினேன். நான் ஒரு பெரிய நிலைக்கு வந்துவிட்டதாய் வீட்டில் அனைவரும் பூரித்தனர். அம்மாவும் சுமதியும் வயல் வேலைக்கு செல்வதை நிறுத்திக்கொண்டார்கள். வசந்திக்கு 20 பவுன் போட்டு கவர்மெண்ட் வாத்தியாருக்கு கல்யாணம் செய்து கொடுத்தோம். போன தடவை ஊருக்கு சென்றிருந்தபோது, ஊர் கண் பட்டுவிட்டது என்று ராமாயி ஆச்சி எங்கள் நால்வரையும் உட்காரசொல்லி, உப்பு மிளகாய்வத்தல் வைத்து திருஷ்டி கழித்து நெருப்பில் தூக்கி போட்டார். சடசடவென்று வெடிக்கும் சப்தம் கேட்டு “திருஷ்டியெல்லாம் கழிஞ்சிருச்சி புஷ்பா ” என்று அம்மாவை பார்த்து கூறினார்.

“அங்கிள்..அங்கிள்..உங்க காலுக்கு கீழே பலூன் பறந்து வந்துடுச்சி .. எடுத்துக்கவா?”
திடுக்கிட்டு, சிறு புன்னகையுடன் குனிந்து பலூனை எடுத்து அவனிடம் கொடுத்தேன்.
“தாங்க்ஸ் அங்கிள்” பலூனிலிருந்த தூசியை துடைத்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தான்.

ரோஸ்கவுன் குழந்தை இப்பொழுது லாவகமாய் பலூனின் கயிற்றை பிடித்து, தெத்துப்பல் தெரிய, பலூனை போவோர் வருவோர் காலிலெல்லாம் அடித்து , சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது. மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தேன். இனிமேல் என்ன செய்வது? கல்யாணத்திற்கு வாங்கிய லோன் மாதமாதம் கட்டவேண்டும். வண்டி வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட வேண்டும். தங்கியிருக்கும் அறைக்கு வாடகை கட்டவேண்டும். இதைதவிர மாதமாதம் செல்போன் பில் வேறு கட்டவேண்டும்.

இப்படி நிறைய “வேண்டும்” கள் அடுக்கடுக்காய் கண்முன் விரிந்தது.
காலடியில் ஏதோ மெத்தென்றது. ரோஸ்கவுன் குழந்தையின் பலூன்தான். “குனிந்து எடுத்துக்கொடுக்கலாமா” என்று யோசிப்பதற்குள், தன் பிஞ்சுவிரல்களால் லாவகமாய் பலூனின் கயிற்றை பிடித்து, என் கால்களில் அடித்து மகிழ்ந்தது. குழந்தை ஏதோ என்னிடம் சொல்லியதுபோல ஒரு உணர்வு. வெளியே வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.
“நீ ஒரு நல்ல வேலைக்கு போயிட்டேனா எல்லாம் சரியாகிடும்..நீ அதுல மட்டும் கவனமாயிருப்பு” - அம்மாவின் குரல் சுகந்தமாய் எங்கிருந்தோ கேட்பது போலிருந்தது.

இரவின் குளுமையை ரசித்துக்கொண்டே, வண்டியை ரூமை நோக்கி விட்டேன் , விடியலை எதிர்பார்த்து நம்பிக்கையுடன்....


Thursday, June 18, 2009

உங்களுக்காக ஒரு ரொமான்ஸ் பதிவு...


தொயந்து சோகமாவே எழுதி, அல்லாத்துக்கும் அழுகாச்சி காட்டுனதால,நெறைய பேர் நொந்து போயிருக்கீங்கனு கமெண்ட்டு,மெயில பாத்தாலே தெரியுது மக்கா...அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துக்கினேன்.இந்த பதிவுல தம்மாத்துண்டு இயத்துலகூட சோகாச்சி வரக்கூடாதுன்னு முடிவு கட்டிக்கினேன்.அத்தால உங்க எல்லாத்துக்கும் ஷோக்கா அதான்பா இன்கிலிபீச்சுல ரொமாண்டிக்கா ஒரு கத சொல்றேன் கேட்டுக்கோ..கத சொல்லும்போச்சு மட்டும் நான் தெளிவாத்தான் சொல்லுவேன்.அதால யாரும் கிராஸ் கொஸ்டின்னெல்லாம் கேக்ககூடாது..சொல்லட்டா......
கதை:
கழுத்தில் புது மஞ்சள் சரடு மின்ன ,கணவன் செந்திலோடு ஒட்டி நடந்தாள் சுந்தரி.நேற்றுதான் திருமணம் நடந்தது.ஈவின்ங் ஷோவிற்கு இரண்டு டிக்கெட்களை எடுத்துக்கொண்டு ,சுந்தரியை உரசியபடியே நடந்தான் செந்தில்.அவளுடைய சரிகை நெய்த அரக்கு கலர் சேலை அவனுடைய கைகளில் உரசி,அவனை கிறங்க வைத்தது.அவளிடமிருந்து வந்த மல்லிகை மணமும் , மஞ்சள் மணமும் அவனை மோகக்கடலில் மூழ்கச்செய்தன. வீட்டிலேயெ இருந்திருக்கலாமோ என்று அடிக்கடி அவனது உள்மனது கூறியது. சுந்தரியுடன் நடந்து செல்வதே அவனுக்கு சொர்க்கத்தில் நடப்பது போலிருந்தது.தியேட்டருக்குள் நுழைந்ததும் அவளின் மெல்லிய விரல்களோடு தன் கைகளை பிணைத்து கொண்டான்.சுந்தரி கைகளை வெட்கத்துடன் விடுவிக்க முயன்றாள்.உடனே கைகளின் இறுக்கத்தை அதிகபடுத்தினான் செந்தில்.சுந்தரியின் முகம் நாணத்தில் சிவந்து இருட்டில் கூட ஒளி காட்டியது.

ஹலோ இன்னா எல்லாரும் கத வாசிக்கிரீங்களா...புடிச்சிருக்கா..என்னாது நான் வர்ரதுதான் புடிக்கலியா..என்னாப்பா இப்பூடி சொல்லிட்டீக..சரி நான் நடய கட்டுறேன்
.

கதை தொடர்கிறது:
இருவரும் சீட்டில் வந்து அமர்ந்தனர்.திரையில் விக்கோ பல்பொடி விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.கண்களில் பெருமை பொங்க சுந்தரியையே பார்த்தான் செந்தில்.அவன் கவனிப்பதை உணர்ந்த சுந்தரி அவனிடம் திரும்பி வெட்கத்துடன் “என்னங்க?” என்றாள்.
“ஒண்ணுமில்லை .நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்” என்றாவாறே அவளுடைய காதுமடலருகே தொங்கும் முடியை எடுத்து சரிசெய்தான் .
அதற்கு ஒரு புன்னகையை பதிலாய் தந்தாள் அவள்.
படம் ஆரம்பித்தது.தன்னுடைய இடது கையை தூக்கி அவளுடைய சேரின் மேல் வைத்து ,அவளை அணைத்துக்கொள்வதை போல் அமர்ந்தான்.அவளும் அதை விரும்புவதுபோல சற்றே இறங்கி அமர்ந்து, மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.

இன்னாப்பா எல்லாரும் தொயந்து படிக்கிரீகளா?? இன்னாது இடலே டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?? சரி சரி அஜ்ஜஸ் பண்ணிக்கோ.இதோ நான் கிளம்பிட்டேன்..

திரைப்படம் ஓடுவதையே மறந்து இருவரும் ஒருவரையொருவர் மனதிற்குள் நினைத்துக்கொண்டு ஆனந்தப்பட்டனர்.பாடல் காட்சிகளின்போது அவளுடைய கைவிரல்களோடு நாட்டியமாடினான் செந்தில்.சுந்தரி வெட்கத்துடன் கையை விடுவித்துக்கொண்டாள்.
“ஏன்??”-செந்தில்.
“யாராவது பார்க்கபோறாங்க!”-சுந்தரி
“பார்க்கட்டுமே..அதுக்குத்தான் உன் கழுத்துல நான் கட்டின லைசென்ஸ் இருக்கே! “ - செந்தில்.
“அதுக்காக தியேட்டர்லயா?? “ - சுந்தரி.
“அப்போ வீட்டுல வச்சுக்கலாமா ! ம் சொல்லு “ என்று குறும்புடன் கேட்டான் செந்தில்.

கன்னம் சிவந்து நாணத்துடன் அவனுடைய தோளில் சாய்ந்தாள் சுந்தரி. பூக்களை வருடும் இளங்காற்றாக அவளுடைய தலையை கோதினான் செந்தில்.சின்ன சின்ன சீண்டல்களிலும் தீண்டல்களிலும் உலகை மறந்தனர்.படத்தின் கதை என்ன என்பது கூட அறியாமல்,திரையரங்கை விட்டு வெளியே வந்தனர்.மூன்று மணிநேரம் மூன்று நொடிகளாய் மாறிப்போனதை நினைத்து இருவருமே வருந்தினர்.

“சுந்தரி. இன்னைக்கு டின்னருக்கு சரவணபவன் போகலாமா?” காரை
ஸ்டார்ட் செய்து கொண்டே கேட்டான் செந்தில்.
“வேணாங்க..மருமகள் தோசை வார்த்திருப்பாள்.நாம் வீட்டில் போயே சாப்பிடுவோம்” என்றபடி காரினுள் ஏறியபடி கூறினாள் நேற்று அறுபதாம் கல்யாணம் கொண்டாடிய சுந்தரி.

என்னா மக்கா..படிச்சீங்களா...அழலையே..அதான் அதான் எனக்கு வேணும்.என்ன கொஞ்சம் கோபமா இருப்பீக கதய படிச்சிட்டு..அதுக்கு நான் என்ன செய்யட்டும்.சோகாச்சி இல்லாமத்தான் எழுதுறேன்னு சொன்னேன்..கோவாச்சி இல்லாமன்னு சொல்லலையே..வரட்டா....கனவு காணாம போயி தூங்குங்க...

Wednesday, June 17, 2009

காத்திருப்பேன் உனக்காக..!


வித்திட்ட விதை எல்லாம்
உன் பேர் சொல்ல
திக்கற்று நிற்கிறேன்
நானிங்கே..
காயத்தை மட்டும்
தந்த நீ
ஏன் களிம்பை தர மறுக்கிறாய்
ஊமைக்கனவுகளுக்கு
எப்பொழுது
உயிர் தரப்போகிறாய்.
உன் நினைவுகளில்
என் வார்த்தைகள்
கூட மயங்கி விட்டன
அதனால்தான்
கவிதை கூட
இங்கே வறட்சியாய்..
நான்
உன்னிடத்தில் வந்த போது
என் எதிர்காலத்தையும்....,
உன் கடந்த காலத்தையும்
மறந்து விட்டேன்.
கானலாகிப்போன
காலங்களுக்காக
என்ன செய்வேன் நான்
கண்ணீரை தவிர ..
இமைக்கும் ஒலி கூட
என்னை பயமுறுத்துகிறது
நீ என்னை பிரியும்போது
தனிமையின்
தணலை தாங்கிக்கொண்டு
தள்ளாடும் வயதிலும்
காத்திருப்பேன் உனக்காக..!

Tuesday, May 26, 2009

மீனாட்சி அக்கா ....

என் பேரு அபிராமி.எங்க அம்மாவும் அப்பாவும் என்னய அபிராமின்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா எனக்கு எங்க மீனாட்சி அக்கா கூப்பிடுறதுதான் பிடிக்கும்."அபிக்குட்டி" ,"அபிசெல்லம்" ன்னு அடிக்கடி கொஞ்சுவா.எங்க அக்கா ,உயரமா கொஞ்சம் ஒல்லியா ,ரொம்ப அழகா இருப்பா.பல்லெல்லாம் அடுக்கிவச்ச மாதிரி இருக்கும்.எப்பவும் பாவாடை சட்டைதான் போடுவா.ஏதாவது விசேஷத்துக்கு போனா மட்டும் மஞ்ச தாவணியும் , சிவப்பு பூப்போட்ட பாவாடையும் சட்டையும் போடுவா.அவளுக்கு என்னைய விட பலமடங்கு முடி.இடுப்புக்கு கீழ்தான் தொங்கும்.அவ கண்ணு ரெண்டும் பெரிசா மீனு மாதிரி இருக்கும்.அவ கண்ணுக்காகத்தான் "மீனாட்சி" னு பேர் வச்சேன்னு அப்பா ,வீட்டுக்கு வர்றவங்ககிட்டஎல்லாம் சொல்லுவாரு.

எனக்கு எங்க அக்காவ ரொம்ப பிடிக்கும்தான்.ஆனா சிலநேரம் அவளோட சண்டை போடத்தான் ரொம்ப பிடிக்கும்.இப்படித்தான் ஒரு நாளு,எங்க வீட்டு பக்கமா இருக்குர வேப்பமரத்துல ஊஞ்சல் கட்டி ஆடிக்கிட்டு இருந்தோம்.என்னைய வச்சு கொஞ்ச நேரம்தான் ஆட்டினா.அப்பறம் அவளே ரொம்ப நேரம் விளையாடினா. எனக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு.அப்பாகிட்ட சொல்றேன்னு அவகிட்ட டூ விட்டுட்டு அங்க இருந்து நடக்க ஆரம்பிச்சுட்டேன்.எங்க இருந்து வந்ததுனே தெரியல, ஒரு வெள்ள கலர் கோவில்மாடு என் முன்னால ஓடி வந்துட்டு இருந்துச்சு.எனக்கு பயம் பயமா வந்துடுச்சு.”ஓ” னு அழுதிட்டேன்.எங்க அக்காதான் ஊஞ்சல்ல இருந்து குதிச்சு ஓடிவந்து, என்னைய தூக்கிட்டு வளைஞ்சு வளைஞ்சு ஓடி வீட்டுக்கு வந்துட்டா.

வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம்தான் தெரிஞ்சது அவ உள்ளங்கையிலயும்,கால் மொட்டிலயும் சிராய்ப்பு.பாவம் ஊஞ்சல்ல இருந்து கீழ விழுந்துட்டால அதான்.உடனே அவள கட்டிக்கிட்டேன்.எனக்கு எங்க அக்கானா ரொம்ப பிடிக்கும்.சில நாள்லாம், என்னய தொட்டில போட்டு தாலாட்டியிருக்கா.என் வெயிட்டு தாங்காம ரெண்டு நாள்லேயெ அம்மாவோட சேல கிழிஞ்சிடும். அதனால அம்மாகிட்ட திட்டு எல்லாம் வாங்கிருக்கா. நீங்களே சொல்லுங்க,யாராவது ரெண்டாப்பு படிக்கிர புள்ளய தொட்டில்ல போட்டு ஆட்டுவாங்களா?.ஆனா,எனக்கு பிடிக்கும்னு என்ன போட்டு ஆட்டுவா.அவ நல்லவ.

எங்க அப்பா படுக்குற ஈஸி சேருல படுத்துக்குறதுன்னா,அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.அதுலயும் பச்ச கலர் துணிதான் சேருல கட்டியிருக்கனும்னு, அப்பாகிட்ட அடம் பிடிச்சு ரெண்டு உறை வாங்கிட்டா.வாரத்துக்கு ஒருதடவை ,அத துவைச்சும் மாத்திடுவா.அவ ஈஸி சேருல படுத்துருக்கும் போது, நான் போனேனா என்னைய அதுல படுக்க வச்சிட்டு,கீழே உட்கார்ந்துகிட்டு,நிறைய கத சொல்லுவா.எனக்காக,பக்கத்து வீட்டு ரமேஷோட பாலமித்திரா, அம்புலிமாமால்லாம் படிச்சு கத சொல்லிருக்கா.

கடைக்கெல்லாம் போனா,எனக்கு பிடிச்ச தேன்மிட்டாயெல்லாம் வாங்கித்தருவா.எனக்கு காது குத்துன அன்னிக்கு என்னய ஃபுல்லா தூக்கி வச்சுகிட்டே திரிஞ்சா.நான் ஸ்கூலுக்கு போகும் போது,சைடு வகிடெடுத்து,அழகா படிய சீவி,பச்ச கலர் ரிப்பன் கட்டிவிட்டு,ஏதாவது ஒரு பூ வச்சு விடுவா.

ஒருதடவை,எங்க அப்பா அவரோட ஃப்ரண்ட்ஸோட ராமேஸ்வரம் போனாரு.என்னையும் கூப்பிட்டு போயிருந்தாரு.பெரிய பிள்ளைங்கரதால, அக்காவ வரவேணாமுனுட்டாரு.எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனால, ராமேஸ்வரத்துல இருந்து வரும்போது,எனக்கும் அவளுக்கும் ஒரே மாதிரி பாசிமணி வாங்கிட்டு வந்தேன்.அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு.உடனே போட்டுகிட்டா.எனக்கும் போட்டுவிட்டா.

தீபாவளிக்கு முத நாளு,எங்க அம்மா இட்லிக்கு,உரல்ல மாவு அரச்சிகிட்டு இருந்தாங்க.அவ சும்மா இருக்கலாமுல்ல, உடனே அம்மாகிட்ட போயி,”குடும்மா.நான் அரைக்கிறேன்” னு ,பாதிலேயெ எங்கூட விளையாடாம போயிட்டா.கோவம் கோவமா வந்துச்சு.கொஞ்ச நேரம் கழிச்சு, அவ அரைக்கிறத நிறுத்திட்டு,ரெண்டு கையையும் இடப்பக்கமா நெஞ்சுல வச்சுகிட்டு, குனியவும் நிமிரவும் செய்தா.அவ கண்ணெல்லாம் கலங்கிருந்துச்சு. எனக்கு பயமா போயிடுச்சு.அவ பக்கத்துல போயி நின்னுகிட்டேன்.அவ உடனே எங்கிட்ட அம்மாவ கூப்பிட சொன்னா.நானும் ,எங்க அம்மாகிட்ட ஓடிப்போயி சொன்னேன்.என் கையில இருந்த பால்கோவாவெல்லாம் கீழ விழுந்துடுச்சு தெரியுமா!

அப்பறம்,எங்க அம்மாவும் அப்பாவும்.என்னய புஷ்பாக்கா வீட்டுல விட்டுட்டு,வெள்ள கலர் அம்பாஸிடருல அக்காவ கூப்பிட்டுகிட்டு போனாங்க.எனக்கு தூக்கமே வரல .எங்க அக்காவ பாக்கணும் போல இருந்துச்சு.பாவம் அவளுக்கு வலிச்சிருக்கும்ல.

அடுத்த நாள்.எங்க அப்பா மட்டும் வந்து,அம்மா பீரோக்குள்ள இருந்து, எனக்கு டிரஸ்ஸும்,மேரி பிஸ்கட்டும்,புது செப்பு சாமானும் வாங்கி கொடுத்துட்டு, புஷ்பாகா வீட்டுலயே விட்டுட்டு போயிட்டாரு.எனக்கு கஷ்டமா இருந்துச்சு.

ரெண்டு நாள் கழிச்சு, எங்க அப்பா மட்டும் சில ஆளுகள கூப்பிட்டு வந்தாரு.அவங்கெல்லாம் எங்க வீட்டு முன்னாடி கொட்டக போட்டுகிட்டு இருந்தாங்க.எங்க அழகம்மா பாட்டி,பசுபதி சித்தப்பா,கலா சித்தி, முத்தையா பெரியப்பா,ராக்காயி பெரியம்மா, பூமி மாமா.புவாயி அத்த,கயலு, சொர்ணா,நாகலிங்கம் எல்லாரும் வந்திருந்தாங்க.ஆனா யாருமே முன்னமாதிரி என்கிட்ட சிரிச்சு பேசவேயில்ல.என்ன தூக்கி கொஞ்சவும் இல்ல.கயலு மட்டும் என்கிட்ட வந்து கண்ணாம்பொத்தி விளையாடலாமான்னு கேட்டா.நான் “மாட்டேன். வரலை” னு சொல்லிட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு,எங்க வீட்டுக்கு ஒரு கருப்பு கலர் வேனு வந்துச்சு.அதுல இருந்து ,எங்க அம்மா தலைய விரிச்சு போட்டுகிட்டு,நெஞ்சுல அடிச்சிக்கிட்டு ,அழுதுகிட்டே கீழ இறங்குனாங்க.எங்க பெரியம்மா போயி எங்க அம்மாவ பிடிச்சுக்கிட்டாங்க.அப்பறம் எங்க சித்தி,சித்தப்பால்லாம் போயி,வேனுக்குள்ள இருந்து எங்க மீனாட்சி அக்காவ தூக்கிட்டு வந்தாங்க.பிறகு,வெள்ளை துணிபோட்ட சேருல உட்கார வச்சாங்க.

“ஏன் அக்கா நடந்து வரமாட்டேங்குறா??ஏன் யாரையும் பார்க்க மாட்டேங்குறா??ரொம்ப தூங்கிட்டாலோ??”. நான் அவ கைய பிடிச்சு “அக்கா..என்ன ஆச்சு” னு கேட்டேன்.உடனே எங்க சித்தி லூசு என்னய கட்டிபிடிச்சுக்கிட்டு அழ ஆரம்பிச்சுட்டாங்க.ஆனா எனக்கு அழுகையே வரல.நிறைய பேர் வந்து எங்க அக்காவுக்கு ரோஜாப்பூ மாலையெல்லாம் போட்டாங்க.அவளுக்கு ரோஜாப்பூன்னா ரொம்ப பிடிக்கும் தெரியுமா??.

அப்புறம் சொர்ணா எங்கிட்ட வந்து “அபி,இப்பவே உங்க அக்காவ நல்லா பாத்துக்க.அப்பறம் பாக்க முடியாதுன்னு” சொன்னா.எனக்கு உடனே கோவம் வந்துடுச்சு.அவ கைய நல்லா நறுக்குன்னு கிள்ளி வச்சிட்டு,ஓடிப்போயி எங்க அக்காவ கட்டிக்கிட்டேன்.அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு,அவளுக்கு பிடிச்ச கலர் பாயிலேயே தூக்கிகிட்டு போயிட்டாங்க.

சொர்ணா சொன்னது உண்மைதான்.அப்பறம் எங்க அக்காவ பார்க்கவே முடியல.நான் நல்லா படிக்கிறேன்னு எங்க அக்காகிட்ட எப்படி சொல்லுறது.?நான் தேன்மிட்டாய் சாப்பிடுறது இல்லேன்னு எப்படி சொல்லுறது? நான் மட்டும் தனியா ஊஞ்சல்ல ஆடிகிட்டு இருக்கேன்னு எப்படி சொல்லுறது..??

'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Tuesday, May 19, 2009

ரசனைக்காரியிடம் சில கேள்விகள்..


இப்பதிவை எழுத அழைத்தவர் தேவன்மயம்.


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ராஜேஸ்வரியா? ரசனைக்காரியா?
முதல் பெயர், அம்மா அப்பா வைத்தது.அப்பெயருக்கான பின்புலம்,நிறைய பேருக்கு உள்ளது போல ஜாதகம்தான்.
இரண்டாவது பெயர்,எனக்கு நானே வைத்துக்கொண்டது.ரசனை என்பது அனைவருக்கும் பொதுவானது.எதை,எங்கே,எப்படி என்ற நிலைப்பாடு மட்டுமே மற்றவரிடமிருந்து வேறுபடுத்தும்.
போர்முனையில் போட்டோகிராபியும்,பசிமயக்கத்தில் குக்கரியும் அவரவர் கொண்டுள்ள மனநிலைப்பாட்டில்,ரசனையை பிரதிபலிக்கும்.அந்நிலைப்பாட்டிற்கான ,எனக்கானதொரு பக்குவநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால்,”ரசனைக்காரி” என்று பெயர் உருவாக காரணம் ஆயிற்று.
இரண்டு பெயர்களுமே எனக்கு பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அழுகையினுடைய மூலம், பொதுவாக அனுதாபத்தை ஏற்படுத்தவும்,இயலாமையின் வெளிப்பாடாகவும் இருக்கும்.அனுதாப அழுகை என்பது அழுக்கேறிப்போன,அருவருப்பான பசபசப்பு.இயலாமையின் அழுகை,ஏற்றுக்கொள்ளப்பட்டு மருந்திடப்படவேண்டியவை.கடைசியாக நான் மனம் வருந்தியது நேற்று.(மே 18ஆம் தேதி,2009ஆம் ஆண்டு ,தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
அம்மா கையால சமைத்த உணவு எல்லாமே.குறிப்பாக மீன்குழம்பும் மட்டன் கோலா உருண்டையும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஒருவருடனான நட்பு,நம்மில் பல பரிமாணங்களை உணர்த்தவும் ,வெளிப்படுத்தவும் உதவும். ஆதலால் நட்பில் நான் கொஞ்சம் நிதானிதான்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?அருவியில்தான்.அதில் மருத்துவ குணமும் உண்டு.கடலில் குளித்துவிட்டு வந்தால் மறுபடியும் குளிக்கவேண்டி இருக்கும்.ஆனால் அருவியில் அவ்வாறூ கிடையாது.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள் + உடை அணிந்திருக்கும் விதம் + அவருடைய வார்த்தைகள்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விசயம்- புது விசயங்களை கற்றுக்கொண்டிருப்பது.
பிடிக்காத விசயம்- நிறைய விசயங்களை தெரிந்துகொள்ளாமலிருப்பது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
மன்னிக்கவும்.இன்னும் திருமணம் ஆகவில்லை.


10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் அப்பா,அம்மா மற்றும் என் தோழி கார்த்திகா.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வெண்மையான புன்னகை.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
இந்த கேள்விகளை மட்டுமே ....


13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கையில் அடக்க முடியா காற்றின் வண்ணம்.அதனால் மட்டுமே, வார்த்தைகள் ,எல்லைகளற்று இருக்கும்.

14.பிடித்த மணம்?
அன்பினால் உதிர்க்கும் சொற்களின் மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
இவரின் கவிதைகள் மனத்தில் எப்பொழுதும் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இவருடைய “இரவிலும் உதிக்கும் வானவில்லே” கவிதை மிகவும் அற்புதமாய் இருக்கும். அவர் நட்புடன் ஜமால் .

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அவருடைய அனைத்து இடுக்கைகளும் ஏதாவது ஒரு செய்தி சொல்லும். குறிப்பாக சொல்ல்வேண்டுமென்றால்,கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கும் இந்த இடுக்கையை சென்று பாருங்களேன்.

17. பிடித்த விளையாட்டு?
நிறைய பேருடன் சேர்ந்து விளையாடும் எல்லாவிளையாட்டுமே. குறிப்பாக கோ-கோ ரொம்ப பிடிக்கும்.

18.கண்ணாடி அணிபவரா?
உலகின் மெய்ப்பொருள் காணவிரும்புவதால், கண்ணாடி (மனத்திரை) அணியும் பழக்கமில்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
யதார்த்தமற்ற படங்கள் தவிர்த்து, மற்ற அனைத்தும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க

21.பிடித்த பருவ காலம் எது?
அனைத்துப்பருவங்களுமே ரசிப்புக்குரியதுதான்.

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
சுஜாதாவின் “கணையாழியின் கடைசிப்பக்கங்கள்”.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அடிக்கடி மாட்டேன்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
மனிதர்களின் மனங்கள்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
உண்டு.(மனிதர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு தனித்திறமை கண்டிப்பாய் இருக்கும்.அதை கண்டுபிடிப்பதில்தான் அவனுடைய வாழ்வின் ஏற்ற தாழ்வு இருக்கிறது)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
எதையும் ஏற்றுக்கொள்ள என்னை பக்குவப்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எனக்குள்ளே இருக்கும் கடவுளோடு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறான்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அடிக்கடி சென்று வரும் வான்வெளி மற்றும் பால்வீதி.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்ப இருக்கிறது கூட நல்லா இருக்கே.

31.மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
ஏதும் செய்ய முடியாதே..சரி பாதில்ல அவங்க.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அனுபவத்தின் மூலமும்,ஆதலால் உருவாகக்கூடிய செயல்கள் மூலமும் உனக்காக நீ எழுதும் வரலாறு.

இந்த தொடர்பதிவுக்கு நான் அழைக்கும் நபர் நண்பர் நட்புடன் ஜமால்.

Tuesday, May 12, 2009

மறுபடியும் மழைவரும்...


மழைத்தூரல்கள் பூமியை நனைத்துக்கொண்டிருந்தன.ஆதவன் தன் ஆடையை பறிகொடுத்துவிட்டு,மலைமுகடுக்குள் ஒழிந்துகொண்டிருந்தான்.அவனுடன் போர்தொடுத்து ஓய்ந்ததுபோல்,கார் மேகம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அலைபாய்ந்துகொண்டிருந்தது.

திருச்சியில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் சலனமற்று பயணித்துக்கொண்டிருந்தாள் ஜானகி.ஜன்னலில் பட்டு தெறித்த நீர்த்துளிகள் அவளது ஆடையை மட்டும் பதப்படுத்தியிருந்தது.துர்கா,அவளது மூன்றரைவயதுச் செல்வம்,நித்திரைக்கு தன்னையிழந்து,தாயின் மடியில் சுருண்டு படுத்திருந்தாள்.

மேலூரைத்தாண்டி பேருந்து சென்றுகொண்டிருந்தது.”இதோ இன்னும் ஒரு மணி நேரத்தில் வீடு வந்துவிடும்.அப்பாவிடம் என்ன சொல்வேன்? எல்லாம் முடிந்துவிட்டதென்றா? இல்லை...இவை எல்லாம் உங்களால்தானப்பா என்றா?” ஜானகியின் எண்ணங்கள் உருபோட்டுக்கொண்டிருந்தன.மீளாத்துயரத்தில் இருப்பதாய் அவளது கண்கள் அர்த்தம் புகுத்திக்கொண்டிருந்தன.

துர்காவின் தலையை கோதிவிட்டபடியே வெளியே பார்த்தாள்.மழை இன்னும் சிறு நூலாக கோடுபோட்டுக்கொண்டிருந்தது.

அப்பா பஸ்ஸ்டாண்டிற்கு வந்திருப்பார்..அங்கேயே சொல்லிவிடுவதா?இல்லை வீட்டிற்கு போய்விட்டு மெதுவாக சொல்வதா?” முடிவு எடுக்கமுடியாமல் கணகளை மூடி ,தலையை பின்னே சாய்த்து,பெருமூச்சு விட்டாள் ஜானகி.அவளுடைய அசைவில் துர்கா விழித்துக்கொண்டாள்.

அம்மா..தாத்தா வீடு வந்துடுச்சா?”

இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடும்.நீ தூங்காத முழிச்சுக்கோ..”

ம் ம்.மா நான் ஜன்னல் கிட்ட உட்காரட்டா?”

சரி வா” -இருக்கையில் அமர்ந்தபடியே,அவளை தூக்கி மடியில் அமர்த்தி,சற்று நகர்ந்து அமர்ந்து துர்காவை சன்னலோரமாய் உட்காரவைத்தாள் ஜானகி.

ஜன்னல் கம்பிகளில் பட்டுத்தெறித்த நீர் துர்காவை குதுகலப்படுத்திக்கொண்டிருந்தது.

மாட்டுத்தாவணி வந்துருச்சு.இறங்குரவங்க இறங்கிக்கங்க..”-கண்டக்டரின் குரல் ஜானகியையும் சென்றடைந்தது.மேலிருந்த சூட்கேசையும்,பேக்கையும் எடுத்து கீழே வைத்தாள்.தன் கைப்பையையும் பேக்கையும் ஒருகையில் மாட்டிக்கொண்டு,ஒரு கையில் சூட்கேசையும் மறுகையில் துர்காவையும் பிடித்தபடியே கடைசியாக இறங்கினாள்.


சென்றமுறை மதுரை வந்த ஞாபகம் மனதினுள் சுழன்றது.துர்காவை P.K.G சேர்க்க வேண்டும் என்று கூறி ,அப்பாவிடம் 5000 ரூபாய் வாங்கிச்சென்று,அந்த மாத்தில் மளிகை சாமான்,பால்,கேஸ் என்று சமாளித்தது ,அவளது மனத்தில் மறுபடியும் ரணத்தை பதித்தது.

இந்த தடவை என்ன சொல்ல போகிறேன்? கடவுளே.ஏன் என்னை சோதிக்கிற?”மனதிற்குள் முணுமுணுத்தபடியே பஸ்ஸ்டாண்டை விட்டு வெளியே வந்தாள் ஜானகி.

எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் தயாராக நின்றுகொண்டிருந்தார் பரசுராம்.

வாம்மா ஜானு..நல்லாயிருக்கியா?”

ம்.இருகேன்பா..”-தன் குரலில் சுருதி குறைந்துவிட்டதோ என்று அவளுக்கே சந்தேகமாயிருந்த்து.

ஏய் ..துர்காகுட்டி ..இங்க வாங்க..தாத்தாகிட்ட வாங்க
ஓடிசென்று தாத்தாவின் கைகளை பற்றிகொண்டாள் துர்கா.

ஜானு.ஏம்மா ஒருமாதிரி இருக்க?”

வீட்டுல போயி சொல்றேன்ப்பா

மூவரையும் ஏற்றிக்கொண்ட ஆட்டோ மங்களம் இல்லத்தை நோக்கி விரைந்தது.

வாடி ஜானு..இன்னைக்கு வரேன்னு நேத்துதான் போன் பண்ணி சொல்லுர..என்னடி ஆச்சு?”-ஜானகியின் தாய் மங்களம்.

மங்களம்,முதல்ல அவ குளிச்சிட்டு சாப்பிடட்டும்.பிறகு பேசிக்கலாம்என்று அதட்டியபடி ஜானுவை நோக்கிபோம்மா.போயி குளிச்சிட்டு வா!” என்றார் பரசு.

துர்காவிற்கு இட்லி ஊட்டிவிட்டு,சுட்டி டிவி சேனலை அவளுக்கு வைத்துவிட்டு,ஜானுவை நோக்கி,”இப்ப சொல்லுடி ..என்ன பிரச்சனை?”-என்றாள் மங்களம்.

அம்மா..நான் அவரை டைவர்ஸ் பண்ண போறேன்”-இதயத்திலிருந்த மவுனத்தை,தலை குனிந்தபடியே சிறிதாய் கலைத்தாள் ஜானகி.

அடி பாதகத்தி..இப்படி ஒரு விசயத்த சொல்லவா அங்க இருந்து ,நீயும் ஒன் மகளும் கிளம்பி வந்தீங்க

ஆமாமா..நான் அப்பப்ப உங்ககிட்ட பணம் கேட்டு தொந்தரவு பண்றதும் மனசுக்கு கஷ்டமா இருக்கு.எனக்கு பிடிக்கல

அதுக்காக..இதுதான் முடிவா?போ.ஒரு வேலைக்கு போ..நீ சம்பாதிச்சு,உம் பிள்ளையையும் உன் புருசனையும் காப்பாத்து..அது பொம்பளை.அதவிட்டுட்டு டைவர்ஸ் அப்படி இப்படின்னு பேசாத

அம்மாவின் குதர்க்கமான பேச்சில் கூட தன்னுடைய நன்மை இழையோடுவதை கவனிக்க தவறவில்லை ஜானகி.

இல்லம்மா..இனி அவரோட சேர்ந்துவாழ முடியாதுஎன்று தன் புருசனுடைய குடிப்பழக்கத்திலிருந்து,வாடிக்கையாகிவிட்டிருந்தஅந்தமாதிரியான தொடர்புகள் வரைக்கும் கொட்டி தீர்த்த ஜானகியின் கண்களில் தீயின்றி நீரில்லை.

பரசுராம் எதுவும் பேச திராணியற்று அமர்ந்திருந்தார்.”சிறிது குடிப்பழக்கம்தான் .போகப்போக சரியாகி விடும்,எப்படியும் தன் மகள் சரி படுத்திவிடுவாள்என்ற நம்பிக்கையில்,விருப்பமே இல்லாத ஜானுவை கட்டாயப்படுத்தி,தன் பால்ய சினேகிதனின் மகனுக்கு,விவாகம் செய்துவைத்தார்.அது இப்படி முடியும் என்று அவர் சிறிதும் நினைக்கவில்லை.

இதுவரை அதட்டி பேசிக்கொண்டிருந்த மங்களம்,சற்று அருகில் வந்து,”ஜானு..பொம்பளைங்க,ஆம்பிள துணை இல்லாம வாழ்றது கஷ்டம்மா..வாழ்வோ தாழ்வோ அவரோட நீ இருந்தா உனக்கு ஒரு பாதுகாப்பு இருக்கும்மாஎன்றாள்

அம்மா..நான் அதெல்லாம் யோசிச்சிருக்க மாட்டேன்னு நினைக்கிறியா?நிலைமை ரொம்ப மோசம்மா..அவரோட செயலகள் ஒண்ணொண்ணும் கீழ்த்தரமா இருக்கு.எனக்கு துர்காவோட வாழ்க்கைய நினைச்சா ரொம்ப பயமா இருக்கு.இதைவிட்டா எனக்கு வேறு வழி தெரியலம்மா

நாட்கள் உருண்டன.ஞாயிறும் திங்களும் ஜானகியையும் தீண்டின.
அம்மா..நான் ஸ்கூலுக்கு போயிட்டு வர்ரேன்..துர்காவை பார்த்துக்கோங்க..” என்றபடி வெளியே வந்து,செருப்பை மாட்டிக்கொண்டு வாசலைக்கடந்தாள் ஜானகி.

சரிம்மாஎன்று அவளின் நிலையை நினைத்து யாரும் அறியா வண்ணம் கண்களில் நீரை வார்த்தாள் மங்களம்.

தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராய் வேலை செய்யப்போவதை நினைத்து,பெருமிதம் கலந்த சந்தோசம் ஒருபுறம், மறுபுறம்..ம்ஹீம். அதை எப்பவுமே வெளியே சொல்லமாட்டாள் ஜானகி.

பள்ளி அருகில் வந்ததும்,அந்த வீட்டை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள் ஜானகி.கண்கள் யாரையோ தேடின.ஏக்கத்தின் சுவடுகளை உள்ளே மறைத்து
பள்ளியினுள் சென்றாள்.கடிகார முட்கள் செவ்வனே தன் வேலையை செய்தன.

மாலை இருட்டிக்கொண்டு வந்தது.வானவெளியில் முகில்கள் படையெடுத்துச் சென்று கொண்டிருந்தன.சிறு சாரல்துளிகள் மண்வாசனையை ஏற்படுத்த தயாராயின.மாணவர்களோடு கலந்து வெளியே வந்து கொண்டிருந்த ஜானகி,பள்ளிகூட வாசலில் நின்று மறுபடியும் அந்த வீட்டை நோக்கினாள்.இப்பொழுது நிழலாடியது அவ்வீட்டில்.

காலம் யாருக்கும் வஞ்சகமில்லாது மாற்றத்தை கொடுத்திருக்கிறதே?நீ கூட எப்படி மாறி விட்டாய்!..மழையை வேடிக்கை காண்பிக்க கைகளில் குழந்தையை ஏந்திக்கொண்டு..அட  அது உன் மனைவியா.. அழகாயிருக்காளே!”

அந்நிழல்களை பார்த்து,தானே மனதுக்குள் பேசிக்கொண்டாள்.சாரலின் வேகம் இப்பொழுது அதிகரித்திருந்தது.நீர்த்துளிகள் இப்பொழுது அவளது ஆடையை மட்டுமல்ல,மனதையும் நனைத்தது.வாசனை மண்ணிலிருந்தும்,அவளது நினைவிலிருந்தும் கசியத்தொடங்கின.