Saturday, March 27, 2010

தீர்மானங்களின் தடுமாற்றம்


இது என்னுடைய 50 வது பதிவு. இவ்வேளையில், நான் பதிவிட ஆரம்பித்த காலகட்டத்தில், தன்னுடைய பின்னூட்டங்களின் மூலம் என்னை பெரிதும் ஊக்கப்படுத்திய ராகவன் அண்ணாவிற்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
-----------------------------------------
தீர்மானங்கள் எடுப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான, இலகுவான விசயம்.தீர்மானங்கள் மனிதனின் மனதை சுத்தப்படுத்தும் கருவியாக இருந்து வருகிறது.தேவையில்லா விசயங்களை தூக்கி எறிந்துவிட்டு, புதிதாக பிறந்ததுபோல வாழ முற்படுத்துவதற்கு, செய்த தவறுகள் பலவற்றை மறப்பதற்கு, மற்றவரிடம் சொல்லி பெருமை படுவதற்கு என்று பலவகையில் தீர்மானங்கள் மனிதனின் ஆளுமையுடன் பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறது.இவ்வுலகில் தீர்மானங்களே எடுக்காத உயிர் என்று எதுவுமே இல்லை.


வருடத்தின் ஆரம்ப நாளில் , தீர்மானங்களை எடுப்பவர்களாகட்டும், அனுதினமும் ஏதாவது ஒரு தீர்மானங்களை எடுப்பவராகட்டும், எத்தனை பேர் அதை சரிவர பின்பற்றுகிறோம் என்பது அவதானிக்க முடியாத ஒன்று.தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாமைக்கு பல காரணிகள் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் பொதுவான ஒரு தடையாய் இருப்பது ஆழ்மன போராட்டம்.

உதாரணத்திற்கு, உடம்பை குறைக்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கும். அதற்காக தினமும் உடற்பயிற்சியும் சரியான உணவு பழக்க வழக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவும் (அதாவது தீர்மானம்) எடுத்திருப்போம். ஆனால் அதிகாலையில் எழுந்து பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் என செயல்திட்டம் உதிக்கும்போது, நம்முடைய தீர்மானங்கள் ஆழ்மனதிற்கு சென்று சேர்ந்திருந்தால், எவ்வித தடையுமின்றி நம்மால் பயிற்சியை தொடர்ந்திட முடியும். அன்றேல், தூக்கம் மட்டும்தான் மிஞ்சும்.

மேலோட்டமாக எடுக்கப்படும் தீர்மானங்களும், சூழ்நிலை கைதியாகி எடுக்கப்படும் தீர்மானங்களும், காற்றில்லாத பலூன்போல கீழே கிடக்கும். சுய சிந்தையோடு, ஆழ்மனதின் விழிப்புணர்வோடு எடுக்கும் எந்த ஒரு முடிவும் தீர்மானமும், நம்மை நம்மையறியாமலே செயல்படவைக்கும்.


வாரத்திற்கு குறைந்தது மூன்று பதிவாவது எழுத வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். அவை ஆழ்மன விழிப்புணர்வோடு எடுக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக பதிவிடுவேன். பார்போம் என்ன நடக்க போகிறது என்பதை.

------------------------------------------

சென்ற வாரம் “இண்டி ப்ளாக்கர்” மீட்டிங் சென்றிருந்தேன். பல புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது.அதில் நிறைய பேர் பல வலைப்பூக்களை நிர்வகிப்பவர்களாய் இருக்கின்றனர். ஒவ்வொரு வலைப்பூவும் ஒவ்வொரு கரு கொண்டதாய் உள்ளது. உதாரணத்திற்கு தொழில்நுட்பம் சார்ந்த வலைப்பூவென்று தனியாக, சமையெலுக்கென்று தனியாக, சொந்த விசயங்களை பகிர்ந்து கொள்ள என்று தனியாக. மேலும் அவற்றின் மூலம் எவ்வாறு பணம் ஈட்டலாம் என்பதிலும் முனைப்பாகவும் தொலைநோக்கு பார்வையுடனும் உள்ளனர்.
----------------------------------




Monday, March 8, 2010

தனிமையைத் தேடி...



அரிதாகிவிட்ட உன் அண்மைகளால்
என் நாட்குறிப்புகள்
தழும்பேறிக்கொண்டிருக்கின்றன.

அடிக்கடி தொலைந்து போய் விடுவாய் எனத்தெரிந்தும்
என் வீட்டுச்சாளரங்களை திறந்து விடுகிறேன்.

உன்னுடனான ரகசிய தொடர்புகளை பத்திரமாய்
என் படுக்கையின் அடியில் பதுக்கி வைத்துள்ளேன்
என்றேனும் எழுந்து வந்து
கடிகார முள் சப்தத்துடன் என்னை ஆளமாட்டாயா என்று .

உலராத நினைவுகளின் வாசனை
என் வீட்டு செம்பருத்தி இலையின் பச்சையமாக இருக்கிறது.
உன்னிருப்பை உணர்த்தும்போது..

என்னுள் என்னை பார்க்கும் தருணங்கள்
நிரம்பிக்கிடக்கின்றன..
நீ என்னை பார்க்கும் வேளையில்..

என்னுடனான மற்றவரின் தொடர்புகள்
எல்லையை விட்டு நகர்ந்து செல்கின்றன
உன் இருத்தலை பொருட்டு..

இதோ இன்னும் சற்று நேரத்தில்
என் அகத்தை விட்டு
வெளியேறிவிடுவாய்...

அக்கணங்களில்
தொலைந்து போவது
நீ மட்டுமல்ல
நானும்தான்...

இந்த வார உயிரோசையில் எனது கவிதை.






Saturday, January 30, 2010

உறவுகளாலான உணர்வுகள்..

உறவுகள் என்றென்றும் நம்மை உணர்வுகளோடு உலாவரச்செய்பவை. அவ்வுணர்வுகளின் சாயமோ உறவுகளின் நிலை பொருட்டு மாறுபட்டுக்கொண்டே இருக்கின்றன. சில உறவுகள் நமக்கு மகிழ்ச்சியை தரும்.சில உறவுகள் வேதனையை தரும். சில உறவுகள் நம்மை தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகுக்கும். சில உறவுகளை தேடிச்சென்றாலும், நம் கை வசப்படாமல் நழுவிச்செல்லும்.


பதினொன்றாம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில், ”முதியோர் இல்லத்தின் மனநிலை” என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டோம். ஆறு பேர் அடங்கிய குழு எங்களுடையது, ஒரு ஆசிரியர் உள்பட. மதுரையில் உள்ள பல்வேறு முதியோர் மற்றும் அனாதை இல்லங்களுக்கு சென்று , அவர்களிடம் தனித்தனியாக பேசி , அவர்களுடைய நிலையையும் அதற்கான காரணங்களையும் அறிந்து கொண்டு, அவற்றிற்கான தீர்வை, நம்முடைய பார்வையில் கொடுத்து, அவ்வறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும். பல பாட்டிகளிடமும், தாத்தாக்களிடமும் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளிலும், உறவுகளைப்பற்றிய ஏக்கங்களும், சூழ்நிலையை நினைத்த நொந்த வலிகளுமே விரவிக்கிடந்தன. உறவுகள் கைவிடப்பட்ட நிலையில், அந்த இடத்திற்கு பல காரணங்களால் அவர்கள் வந்திருந்தாலும், அடிப்படை காரணங்கள் அன்பை பெறுதலில் உள்ள சிக்கல்களும், புரிந்துகொள்ளலில் உள்ள தவறுகளுமே.. அன்பிற்கு ஏங்காதவர் யாரும் உண்டோ?

கல்லூரியில் தங்கி படிக்கும் காலகட்டத்தில் , வாரம் ஒருமுறை வீட்டிலிருந்து கடிதம் வந்துவிடும். வார்டன் அவர்கள் தான் அதை தருவார். அதையும் பிரித்துதான் தருவார். அவர் கையிலிருந்து வாங்கியதும் அடையும் சந்தோசம் மிகப்பெரியது. கிறுக்கல் எழுத்துக்களில், சில எழுத்துப்பிழைகளோடு அப்பா எழுதியிருக்கும் வார்த்தைகளில், நலவிசாரிப்பும், படிப்பின் அவசியம் பற்றியுமான வாசனை இழையோடும். மடல் வர தாமதமாகி , தொலைபேசியில் அழைக்க முடியாத சூழலில் இருக்கும் நாட்கள் வலியானவை. தொலைவில் இருந்தாலும், வீட்டிலிருப்பவர்கள் அனைவரையும் அருகில் வைத்திருந்தது அப்பாவிடம் இருந்து வந்த அம்மடல்கள்.


ஆனால் இப்பொழுது கடிதங்களுக்கு பதிலாக சிலநிமிட பேச்சுக்களிலே நலவிசாரிப்புகள் முடிந்துவிடுகின்றன. அன்று அப்பா அனுப்பிய கடிதங்களை இன்று நுகர்ந்துபார்க்கிறேன். அவருடைய எழுத்துக்களில் ஊறியிருக்கும் அன்புச்சிதறல்களை உணரமுடிந்த என்னால், இன்று பேசி வைத்த தொலைபேசியின் வயர்களில் உணரமுடியவில்லை.

சிறு வயதில்,பொரிகடலை வாங்கித்தருவார் என்பதற்காகவே , எனது தந்தையின் கால்களை அமுக்கி விட்டிருக்கிறேன்.அன்று அவருடைய கால்வலியை நான் உணர்ந்துகொண்டதில்லை.
ஆனால் இப்பொழுது உணர்கிறேன், ஒருவித வலி கலந்த அன்புடன்.

பல குடும்பங்களில் ,உறவுகளில் விரிசல் ஏற்பட்டு,பல வருடங்கள் பேசாமல் இருந்து , பிறகு ஒன்று சேர்ந்த கதை கண்டிப்பாக இருக்கும். அக்கதையின் களம் பெரும்பாலும் திருமணவீடோ அல்லது இறந்த வீடோவாகத்தான் இருக்கும். அச்சூழலில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.எனது தந்தையும், அவரது அக்காவும்(எனது அத்தை),கிட்டதட்ட 12 வருடங்களாக பேசாமல் இருந்தார்கள். பிறகு சில வருடங்களுக்குப் பிறகு, இரு குடும்பமும் எனது அண்ணனின் திருமணத்தில் ஒன்று சேர்ந்தனர். அன்று கொண்டாடிய மகிழ்ச்சியை மறக்கவே முடியாது.

உறவுகள் என்றுமே அற்புதமானவை. நம்மை மகிழ்ச்சிப்படுத்துபவை (கையாளும்முறை பொறுத்து). விரும்பிய உறவுகள் அருகில் இருக்கும்போது யானைபலம் நம்முள்.உடுக்க,உண்ண, உறைய நேரம் ஒதுக்குவதுபோல உறவுகளுக்கும் நாம் நேரம் ஒதுக்கவேண்டும். அரையாண்டு மற்றும் முழுஆண்டு விடுமுறை நாட்களில்,சில நாட்களிலாவது குழந்தைகளை உறவுகளின் ஊடே வளரவிட வேண்டும். நமக்கு பிறகு அச்சங்கிலியை பிடிக்க போவது அவர்கள்தானே....