அடுக்குமாடிகளின் ஆவேச வளர்ச்சியால்,அமைதியாக,சவப்பெட்டிக்குள் செல்வதற்கான நாட்களை தினந்தோறும் எண்ணிக்கொண்டிருக்கின்றன ,விளைநிலங்களும்,எழில் கொஞ்சும் பூஞ்சோலைகளும் ...
வீட்டை சுற்றிலும் வேம்பும் புன்னையும் படர்ந்திருக்க,அவற்றில் கொச்சை கயிற்றை கட்டி,மரப்பலகையை வாகாக வைத்து,காற்றிலே ஊஞ்சலாடிய காலம் போய்,கருவறைக்குள்ளே குழந்தை அசைவதைப் போல,வீட்டிற்க்குள்ளே கம்பியால் ஆன ஊஞ்சல் இன்று.. ஊஞ்சலுக்கு கூட கடிவாளம் கட்டியது காலத்தின் மாற்றம்.
புதிதாய் கறந்த பாலில்,சுக்கு, மல்லி, வெல்லம் தட்டி போட்டு,காலையில் பருகும் காபியில் கூட உடல் நலத்தை பேணிய காலம் எங்கே...கானல் நீராய் போனதுதான் மிச்சம்.
பெண்களுக்கு தாலி கட்டாத கணவனாகவும்,ஆண்களுக்கு முழுநேர காதலியாகவும்,விளங்கிக்கொண்டிருக்கும் கணிணியில்,நம் பாரம்பரிய வாழ்வு அடகு வைக்கப்பட்டு விட்டது.மீட்டெடுக்கும் நாளும் அடுத்த தலைமுறையை சாராது.நம்மாலானது,பழமையை மறக்காமல் ,அந்நினைவுகளை அசைபோடுவதுதான் என்றாகிவிட்டது.அதில் நானும் விதிவிலக்கல்ல.
நான் எப்பொழுது மதுரை சென்றாலும்,ஒரு விசயத்தை மறக்காமல் செய்துவிடுவேன்.அது, முருகனை தரிசிக்க என்று கூறி திருப்பரங்குன்றம் செல்வதுதான்.ஆனால் உண்மையான காரணம் பருத்திப்பாலும் பணியாரமும் தான்.
மாலை 5 மணிக்கு மேல்,அக்கோவில் வீதியில், அங்கொன்றும் இங்கொன்றுமாய்,பருத்திப்பால் கடையும் ,பணியாரகடையும் களைகட்டும்.சென்னையில் பீசாவும் கெண்டக்கி சிக்கனும்(ஒரு பில்டப்புதான்),உண்டு பழுப்பேறி போன நாவிற்கு,இதமாய் அமையும் பருத்திப்பாலை ,இரண்டு தம்ளர் வாங்கி பருகினால்தான் என் மதுரை பயணம் பூர்த்தியடையும்.
மூன்று பணியாரங்களை பார்த்துவிட்டு ,ஏற்படும் கோபம்,அவ்வீதியில்,வேலாயி பாட்டிகடையில் ரூபாய்க்கு இரண்டு வாங்கும்போது தணிந்துவிடும்.
நான் சிறுவயதாய் இருந்தபொழுது,எங்கள் வீட்டின் அருகே,ஒரு பெரிய தோப்பு இருந்தது.அந்நாட்களில்,என் அப்பாவுடன் அந்த தோப்பிற்கு சென்று குளிப்பது வழக்கம்.என் அப்பா மோட்டர் போட்டுவிட்டு குளித்துவிட்டு வரும்வரை,தோப்பு முழுதும் எனது ராஜாங்கம்தான்.வேப்பங்குச்சியில் பல்துலக்கிகொண்டே,சறுக்கலில் ஏறி விளையாடுவதும்,ஊஞ்சல் அந்து விழும் அளவிற்கு ஆடுவதும்,தட்டானையும் பட்டாம்பூச்சியையும் தேடி அலைந்ததுமாய்,இதமானதொரு மகிழ்ச்சியை தந்து கொண்டிருந்தது அந்த தோப்பு.கிணற்றிலே,நான் நீச்சல் பழகுவதற்கான அடிநாதமாய் விளங்கியதும் அவ்விடம்தான்.
ஆனால் ,இன்று அந்த இடத்தில் அக்குளிர்சோலை இருந்ததிற்கான சுவடே இல்லை.இளநீரும்,மாங்காயும்,அவரையும், கத்தரியும் கொடுக்கும் அவ்வட்சய பாத்திரம்,ரியல் எஸ்டேட்காரர்களால் சூறையாடப்பட்டுவிட்டது.என் விளையாட்டு திடலும்,பட்டாம்பூச்சியும் களவாடப்பட்டது.
நாள்முழுதும் ஏசி குளிரில் விறைத்துக்கொண்டிருக்கும் எத்தனைபேருக்கு,தோப்பு மூலிகை நிழல் புரியும்.காசு கொடுத்து நோயை வாங்கிகொண்டிருக்கும் எத்தனை பேருக்கு இயறகை உணவுகள் தெரியும்.
இதெற்க்கெல்லாம் காரணம் யார்? நாம் ..நாம் மட்டும்தான்.சிறுகுடலை வெட்டி எறிந்துவிட்டு,எனக்கு ஜீரணம் ஆகவில்லை என்பது போலல்லவா இருக்கின்றோம்.மரங்களின் புனிதமும்,இயற்கையின் முக்கியத்துவமும்,பணத்தின் முன் அடிபட்டுக்கொண்டிருக்கிறதே..
இந்நிலை தொடர்ந்தால்,பருத்திபால் குடிக்க மதுரை செல்லும் என்னைப்போல,ஆக்ஸிசன் நுகர எங்கேயாவது செல்ல வேண்டியிருக்கும் அடுத்த தலைமுறை.