முதலில் இந்த பதிவை எழுத என்னை அழைத்தமைக்கு ,ராகவன் சாருக்கு நன்றிகள் பல.
இந்த தலைப்பில் பதிவு எழுத வேண்டும் என்று நினைத்த நேரத்தில் இருந்தே ,என் மனதில், நிறைய பேர் நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு மடை திறந்த வெள்ளமாய் ஓடிக்கொண்டிருந்தனர்.நான் சிறு வயதில் பாடங்களில் படித்த,சுதந்திர போராட்டவீரர்,கவிஞர்,அறிஞர், விஞ்ஞானிகளில் இருந்து ,இன்று என் கண் முன்னே நடமாடிக்கொண்டிருக்கும் சாதனையாளர்கள் வரை ,அப்பப்பா ,எத்தனை பேர்!.
இதில் எந்த இருவரை பற்றி பதிவிடுவது? வரும் வாரத்தில் பெண்கள் தினம் வர இருப்பதால் ,சரி ,பெண்கள் இருவரை பற்றி எழுதலாம் என்று முடிவு செய்தேன். என்னைக்கவர்ந்தவர்கள் என நான் குறிப்பிட போகும் இருவரில், முதலாமானவர் ,படிப்பறிவு இல்லாவிட்டாலும், தான் இருந்த இடத்திலேயே ,பலருக்கு நன்மை புரிய முடியும் என நிரூபித்தவர்.மற்றொருவர், சாதரண குடும்பத்தில் பிறந்து ,தன்னுடைய கல்வி அறிவால்,எல்லைகளற்று விரிந்து ,பல நாடுகளுக்கிடையே வணிகம் உயர காரணமாய் இருப்பவர்.
இந்த இருவருமே வாழ்வின் இரு விளிம்பில் இருந்து வெற்றி பெற்று கொண்டிருப்பவர்கள்.
சின்னபிள்ளை : தான் இருக்கும் சூழ்நிலைகளையும் ,வறுமையையும் காரணம் காட்டி ,முன்னேற்றமின்மைக்கு விளக்கம் தரும் சாதாரண மனிதர்களுக்கு மத்தியில் ,படிப்பறிவு இல்லாவிட்டாலும் ,தன்னுடைய கடின உழைப்பாலும், சேவை மனப்பான்மையாலும் ,இன்று பல குடும்பங்களுக்கு விடி வெள்ளியாய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர், மதுரைக்கு அருகே இருக்கும் அழகர்கோவிலுக்கு பக்கத்தில் அமைந்த புளிசேரி எனும் கிராமத்தை சேர்ந்தவர்,

அன்றாடம் கூலி வேலையும் ,விவசாயமும் செய்து கொண்டிருந்த சின்னபிள்ளை,சரியான கூலி தராமல் ஏமாற்றும் பண்ணை முதலாளிகளை தட்டி கேட்கலானார் (MGR விசிறி போல).அவருடைய தைரியத்தின் மூலம் அவருக்கு சரியான கூலி தரப்பட்டது.ஆகவே இவரின் கூட இருந்தால் ,நமக்கும் சரியான கூலி கிடைக்கும் என்று பல பெண்கள் அவருடன் இணைந்தனர்,இவ்வாறு அவர்களுக்கெல்லாம் சிறு தலைவியாக விளங்கினார்.
பின்பு "Dhan Foundation" எனும் சேவை அமைப்பின் மூலம் உருவான "களஞ்சியம்" எனும் அமைப்பில் 1989 ஆம் ஆண்டு சாதாரண உறுப்பினராக சேர்ந்து ,இன்று அதனுடைய முக்கிய செயலராக விளங்கி கொண்டிருக்கிறார்."களஞ்சியம்" என்பது சிறுசேமிப்பை வலியுருத்தும் ஒரு சேவை அமைப்பு.
அன்றாடம் கூலி வேலை செய்யும் பெண்களிடையே சேமிப்பின் மேன்மையை வலியுறுத்தி "களஞ்சியத்தை" விரிவுபடித்தியவர்.இதனால் பலனடைந்த குடும்பங்கள் பல.
"The Hindhu" பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் "ஆரம்பத்தில் பத்து பேரிடம் இருந்து தலா இருபது ரூபாய் பெறப்பட்டு,இப்பொழுது ,இந்தியா முழுவதும் சுமார் நான்கு லட்சம் உறுப்பினர்களை கொண்டுள்ளது களஞ்சியம்.மொத்த சேமிப்பு தொகை நூறு கோடியை எட்டி இருக்கிறது" என்றார்.
இவருடைய சேவையை பாராட்டி இந்திய அரசு "ஸ்திரீ சக்தி" விருதும் தமிழக அரசு "பொற்கிழி விருதும்" வழங்கி கவுரவித்தது .பிரதமரிடம் (வாஜ்பாய்) விருது வாங்கும் பொழுது ,இந்தியப்பிரதமரே அவர் காலில் விழுந்து ஆசி வாங்கிய பெருமை சின்னபிள்ளை அவர்களையே சாரும்.
கூடிய விரைவில், ஆப்பிரிக்கா,நெதர்லாந்து ,மெக்சிகோ போன்ற இடங்களுக்கு பயணம் மேற்க்கொண்டு எவ்வாறு "களஞ்சியம்" போன்ற அமைப்பின் மூலம் கிராம முன்னேற்றத்தை மேம்படுத்தலாம் என்று உணர்த்தபோகிறார்.அவருடைய பயணம் தொடரட்டும்
இந்திரா கிருஷ்ணமூர்த்தி நுயீ:
நுயீ,தற்சமயம், உலகின் நான்காவது மிகப்பெரிய "உணவு மற்றும் பானம்" நிறுவனமான "PepsiCo" வின் முதன்மை செயலதிகாரியாய் (CEO) இருக்கிறார்.சென்னையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து ,தன்னுடைய கூறிய அறிவாலும் தன்னம்பிக்கையாலும் ,எல்லைகளற்று விரிந்து சேவை புரியும் இவர் ,தன்னுடைய பள்ளிவாழ்க்கையை ,"சித்தார்த்தா வானஸ்தாளியிலும் ,கல்லூரி வாழ்க்கையை(B.Sc Chemistry) MCC யிலும் ,செதுக்கினார்.பிறகு கொல்கத்தா IIM இல் PGDBA பயின்றார் .அதன்பின் நன்கு படிப்பவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையின் மூலமே "Yale School of Management"இல் முதுகலை நிர்வாகவியல் பயின்றார்.

இவ்வாறு அவருடைய கல்வி எனும் கிராப் உயர்ந்து கொண்டே போனது.பிறகு பிரபல நிறுவனங்களான "Motorola","BCG", மற்றும் "ABB" யில் பணிபுரிந்தார். 1994 ஆம் ஆண்டு ,பெப்சிகோ நிறுவன கிளை ஒன்றின் தலைவரானார்.பிறகு சீரிய உழைப்பால்,2001 ஆம் ஆண்டு முதன்மை நிர்வாக அதிகாரியானார் (CFO). 2006 ஆம் ஆண்டு ,PepsiCo நிறுவனத்தின் CEO வாக பதவி ஏற்றார்.PepsiCo வின் 42 ஆண்டு கால வரலாற்றில் ,ஒரு இந்தியப்பெண்மணி இவ்வளவு பெரிய பதவி வகித்தது அதுவே முதல் முறை.
மேலும் அவர் 2008 ஆம் ஆண்டு ,USIBC(US-India BusinessCouncil) யின் முதன்மை அதிகாரியாக பதவி ஏற்றார்.USIBC என்பது அமெரிக்க இந்திய நாட்டுக்கு இடையே நடக்கும் வர்த்தகத்திற்கான நடுநலை அமைப்பு.
இவ்வாறு பல பதவிகளை ,திறம் பட வகித்து கொண்டிருக்கும் அவரை ஒபாமாவின் அரசியல் நிர்வாகத்தில் "திறன் நிர்வாக அதிகாரி(Potential Commerce Secretary) "யாக ,செயற்படுத்தும் முயற்சியும் நடந்தது .கென்யாவில் பிறந்து வெள்ளை நாடான அமெரிக்காவை ஆளும் ஒபாமாவை கொண்டாடும் அனைவரும் ,சென்னையில் பிறந்து ,உலகின் பல தொழில் நிறுவங்களை ஆளும் நம்முடைய நூயியை கண்டிப்பாக நினைத்து பார்க்க வேண்டும்.