Sunday, April 12, 2009

செவ்வந்தி..


”ஆத்தா..தராச எடுத்து சாக்கு பையில போட்டுட்டேல..”

“போட்டுட்டேன்டா..இந்தா இந்த நீராரத்த குடி..தூக்குவாளில வெண்ணிபழசும்,வெங்காயமும் வச்சுருக்கேன்..பாறப்பட்டி வட்டகல் வந்ததும் தின்னுருல”

“நான் தின்னுக்குறேன்..மீதி புளியெல்லாம் குலுமையில போட்டாச்சுல..”

“ம்ம்..ஆச்சு..”

“முருகன் படத்து சட்டத்துல அம்பது ரூவா சொருகி வச்சுருக்கேன்,நம்ம கோனாரு வருவாக..வந்தா கொடுத்துரு..”

“நான் கொடுத்துக்கறேன்..நீ விரசா சோலிக்கு கிளம்புல..”

“சரித்தா..நான் வர்ரேன்..”

“ஏலே கொமாரு..நம்ம கணக்குபுள்ள தெருவுல ,செவ்வந்தி ருக்குவோட சுத்திக்கிட்டு இருப்பா..அவள வரச்சொல்லு..”

“சரி..சரி..சொல்றேன்” என்றபடி புளிகூடையை பின்னால் வைத்து,ஹாண்டில் பாரில் தொங்கிகொண்டிருக்கும் சாக்கு பைக்குள் தராசையும் வைத்து,கணக்குபிள்ளை தெருவை நோக்கி சைக்கிளை அழுத்தினான் குமார்.

“புளி.புளிளிளி...புளிளி..” கூவிக்கொண்டே அந்த தெருவை அடைந்தான்.

செவ்வந்தி ருக்குவின் சைக்கிளை வைத்து வட்டம் போட்டு கொண்டிருந்தாள்.

“இந்தா ..செவ்வந்தி..ஞாயித்து கெலம ஆச்சுனா ஆத்தாவுக்கு கூட மாட வேல செய்யிறத விட்டுபுட்டு ,இங்க வந்து சுத்திகிட்டு இருக்க”

“இல்லண்ணே..ருக்குதான் கூப்பிட்டா..”

“சரி ..சரி ஆத்தா கூப்புடுச்சு..வூட்டுக்கு போ...”

“அண்ணே..போன திருவிழாவுக்கே சைக்கிளு வாங்கித்தாரேனு சொன்ன..இன்னும் வாங்கிதரல...”

“நம்ம அழகன்சாமி மலை ஏறட்டும்..உனக்கு சைக்கிளு என்ன ,பட்டு பாவட தாவணியே வாங்கிருவோம்..”

“எனக்கு பாவடை தாவணியெல்லாம் வேணாம்..சைக்கிளுதான் வேணும்..”

“சரி வாங்கிபுடலாம்..நீ இப்ப வூட்டுக்கு போ..ஆத்தா தேடிக்கிட்டு இருக்கும்..”

”ம்..சரி”
------------------------------------

“ஏண்டி..செவ்வந்தி..காலைல பல்லு கொப்புலுச்சியா?விடிஞ்சா போதும் வூட்டுல தங்குறது இல்ல..”

“ஆத்தா ..ருக்கு சைக்கிள் வச்சுருக்கா...நெதமும் அவ அதுலதான் பள்ளிகோடத்துக்கு வருவா...”

“அதுக்கு என்னா இப்போ..தெரிஞ்சதுதான..”

“எனக்கும் சைக்கிள் வேணும் ஆத்தா..நானும் ஆறாப்பு போனதுலருந்து கேட்டுக்கிட்டே இருக்கன்ல..”

“உன் அண்ணன் புளி,காய் இதுல வித்து வர்ர காசுல உனக்கு இன்னும் ஒரு பொட்டு தங்கம் வாங்க முடியல..நீ சைக்கிளு கேட்டுகிட்டு திரியிர...”

“எனக்கு தங்கமெல்லாம் வேணாம்..சைக்கிளுதான் வேணும்..”

“ஆமாண்டி...வெறும் சைக்கிள மட்டும் வாங்கிகிட்டு உன்ன எவன் கட்டிப்பான்..போ..போயி அந்த கூடைய எடுத்து தனத்த அடச்சு வையி..”

“ம்ம்..”

“ஆறு குஞ்சும் இருக்கானு சரியா எண்ணி பாத்து கவுத்துடி...”

“சரித்தா...எனக்கு தெரியாதா..சும்மா நொய்யி நொய்யினுட்டு..”
-----------------------------------------------
”ஆத்தா..ஆத்தா...”

“என்னடா கொமாரு..இப்படி கத்துற ..கொல்லயில நம்ம தனத்துக்கு கம்பு போட்டுகிட்டு இருந்தேன்...என்ன விசயம் சொல்லு..”

“நம்ம வடிவேலு அய்யாகிட்ட பேசி 500 ரூவா கடன வாங்குனேன்..”

“எதுக்கு இவ்வளோ காசு வாங்குன...யாரும் சொந்தக்காரக வர்ராகளா..”

“இல்லத்தா..நம்ம செவ்வந்தி ரொம்ப நாளா சைக்கிளு கேட்டுக்கிருந்துச்சுல..தத்தி தத்தி பதுனொன்னாப்பு வேற போயிட்டா..சரி போகுது கழுதனு சைக்கிளு வாங்கிப்புடலாம்னுதான் காசு வாங்கியாந்தேன்..”

“ஏண்டா..உனக்கு கிறுக்கு புடுச்சுருக்காடா..இந்த காச வச்சு ஒரு சிலுக்கு சேல வாங்குனாவாது,கல்லாணம் காச்சினு வந்தா அவ கட்டிக்கிருவாள்ல...அதவிட்டுட்டு,ஆம்பள கணக்கா சைக்கிளு லாரினுகிட்டு..”

“ஆத்தா..அதெல்லாம் பொறவு பாத்துக்கலாம்..இன்னும் கொஞ்ச நாலுதான அவ இங்க இருக்க போறா...அவ சந்தோசமா இருந்துட்டு போகட்டுமே..”

“சரி..உன் இஷ்டம்..”

“கோவிந்தன் கடையில ஒரு சைக்கிளு சொல்லி வச்சிருக்கேன்..நாளைக்கு நானும் செவ்வந்திய்ம் போயி எடுத்துக்கிட்டு வந்துர்ரோம்..”

“ம்ம்...சரி சரி..”

---------------------------------------------------------


“ஆத்தா.நான் போயிட்டு வர்ரேன்...”-செவ்வந்தி.

“ஏ..கொமாரு,இங்க பாருடா..நீ சோலிக்கு போற வரைக்கும் பள்ளிக்கோடம் கெளம்பாம சுத்துறவ,அந்த சைக்கிளையும் குளுப்பாட்டி கெளம்பிட்டா..”

“விடுத்தா..எப்ப பாத்தாலும் அவள் குற சொல்லிகிட்டு..நீ கெளம்பும்மா,செவ்வந்தி..”

“ஆமாண்டா..வயக்காட்டு பக்கம் போனாக்கூட ,அந்த வண்டியையும் எடுத்துக்கிட்டு தான் போறா.. சரசக்கா சொல்லி சிரிச்சா.. இப்ப கூட பாரு,அந்த வண்டிக்கும் குங்குமம் சந்தனம்னு வச்சு ஏறிபோறத”

“சரி..சரி ..விடுத்தா..சின்னப்புள்ள அப்படிதான் இருக்கும்..”
----------------------------------------------------

”ஆத்தா.. நாளைக்கு வாடிப்பட்டிகாரக வர்ராகனு சொல்லிருந்தேன்ல..”

“ஆமா சொன்ன..செவ்வந்திகிட்டயும் சொல்லியாச்சு..அவ எதையும் காதுல வாங்கிக்காம ,வண்டிய எடுத்துட்டு ஊர் சுத்த போயிருக்கா..”

“நாளைக்கு வர்ரவுக வெத்தல பாக்கு மாத்திட்டுதான் போவாக..அதனால நம்ம வூட்டுலதான் ராத்திரி சாப்பாடு...”

“அதுக்கென்னா இப்போ..எல்லா வூட்லயும் இருக்கறதுதானே...கையில காசு ஏதும் வச்சுருக்கியா?..”

“இல்லத்தா..இருந்த காசத்தான் ,போன வாரம் நம்ம வடிவேலு அய்யாகிட்ட கொடுத்தேன்...நீ ஏதும் வச்சிருக்கியா..?”

“நம்ம தனத்த,சரசக்கா அவுக மாப்புள்ள வர்ராகனு சொல்லி 100 ரூவா கொடுத்து வாங்கிட்டு போனாக..அதான் இருக்கு..”

“சரித்தா...அத கொடு..நான் போய் புழுங்கரிசியும் ,பருப்பும் நாடார் கடயில போயி வாங்கியாரேன்..”

----------------------------------------------------------
“எப்படியோ கொமாரு..நிச்சயத்த நல்ல படியா முடிச்சாச்சு...கல்யாணத்தயும் முடிச்சிட்டோமுனா..ஒரு பாரம் கொறயும்...”

“ஆமாத்தா..நானும் அதத்தான் யோசன பண்ணிட்டு இருக்கேன்..”

“ஆமா ..கடேசி நேரத்துல,அவுகளுக்கு பலகாரமும் .செவ்வந்திக்கு பூவும் வாங்க காசு இல்லேனு சொல்லிக்கிருந்த..அப்பறம் எப்படி அவ்வளவு மல்லிப்பூவும்,கிலோ கணக்குல ஜாங்கிரியும் லட்டும் வாங்கியாந்தடா..”

“அது ஒண்ணுமில்ல ஆத்தா...செவ்வந்தி சைக்கிள வித்துட்டேன்..”

கொல்லைப்புரத்தில் நின்றிருந்த செவ்வந்தி,தலையிலிருந்த மல்லியை ஒவ்வொன்றாய் பிய்த்துக்கொண்டிருந்தாள்.






27 comments:

நட்புடன் ஜமால் said...

வட்டார பேச்சுகள்

அழகு வீச்சுகள்

நட்புடன் ஜமால் said...

\\கொல்லைப்புரத்தில் நின்றிருந்த செவ்வந்தி,தலையிலிருந்த மல்லியை ஒவ்வொன்றாய் பிய்த்துக்கொண்டிருந்தாள்\\

இயலாமையின் நிலை ...


எழுத்து நடை மிக அருமை.

வேத்தியன் said...

அருமையா இருக்கு...
படைப்பு சூப்பர்...
வாழ்த்துகள்...

Rajeswari said...

வாங்க ஜமால்....கருத்துக்களுக்கு மிக்க நன்றி..

Rajeswari said...

நன்றி வேத்தியன்..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

மகேஷ் : ரசிகன் said...

அருமையான நடை. அசத்துங்க

Rajeswari said...

மகேஷ் said...
அருமையான நடை. அசத்துங்க//

வாங்க மகேஷ்..முதல் தடவையா வந்து இருக்கீங்க..அடிக்கடி வாங்க..

அப்பாவி முரு said...

//“ஆமா ..கடேசி நேரத்துல,அவுகளுக்கு பலகாரமும் .செவ்வந்திக்கு பூவும் வாங்க காசு இல்லேனு சொல்லிக்கிருந்த..அப்பறம் எப்படி அவ்வளவு மல்லிப்பூவும்,கிலோ கணக்குல ஜாங்கிரியும் லட்டும் வாங்கியாந்தடா..”


“அது ஒண்ணுமில்ல ஆத்தா...செவ்வந்தி சைக்கிள வித்துட்டேன்..”//

ஆத்தி., மல்லிப்பூவுக்கும், ஜாங்கிரிக்குமே சைக்கிள வித்தாச்சு...

அப்ப, செவ்வந்தி கல்யாணத்துக்கு எதை விக்கபோறான் இந்த கிறுக்குப்பையன் குமாரு?

சென்ஷி said...

:-)

நல்லாயிருக்குங்க..

முடிவு பாரம்தான்.

தமிழ் மதுரம் said...

உங்கள் கதை நகருத்தும் பாங்கும், வட்டார மொழி வழக்கும் சிறப்பாக உள்ளது.

ஒரு சில நெருங்கியவர்களின் மறைவு காரணமாக வலைப் பதிவுப் பக்கம் கடந்த சில நாட்கள் எட்டிப் பார்க்கவே முடியவில்லை. தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு!

coolzkarthi said...

அக்கா அருமையான நடை...எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.....

அப்துல்மாலிக் said...

நல்லாயிருந்தது பேச்சுவாக்கில் எழுத்தோட்டம்

தீப்பெட்டி said...

ரொம்ப நல்ல இருக்கு..
நல்ல மண் வாசனையோட இருக்கு கதை.

இன்னும் செவந்திகள் இருக்கத்தான் செய்கிறார்கள்
என்பது வருத்தம் தான்.

Joe said...

பிரமாதம்.

எழுத்து நடை அருமை.

Rajeswari said...

அப்பாவி முரு said...

ஆத்தி., மல்லிப்பூவுக்கும், ஜாங்கிரிக்குமே சைக்கிள வித்தாச்சு...

அப்ப, செவ்வந்தி கல்யாணத்துக்கு எதை விக்கபோறான் இந்த கிறுக்குப்பையன் குமாரு?//

இதெல்லாம் கிராமத்துல சகஜம்ப்பா(வாங்குனதே.500 ரூபாய்க்கு)

Rajeswari said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

கமல்..

சென்ஷி..

ஜோதிபாரதி..

தம்பி கார்த்தி..

அபு சார்..

ஜோ..

Suresh said...

இது அல்லவா நடை அருமை .... உங்கள் எழுத்துகளுக்கு தலை வணங்குகிறேன்

Suresh said...

என்ன வட்டார பேச்சு அருமை தோழி

ராம்.CM said...

அழகாக பேச்சுவழக்கில் எழுதியுள்ளீர்கள். நடை அழகு... அருமை. எனக்கு பிடித்திருந்தது. இரண்டு ஓட்டும் போட்டாச்சு...

பட்டாம்பூச்சி said...

மிக அருமை :)

ஆதவா said...

ரொம்ப இயல்பா எழுதியிருக்கீங்க. கிராமத்து வாசனை நல்லா தூக்குது.. தொண்ணூத்தி ஐந்து சதம் உரையாடல்களோடு கதை பயணிக்கிறது... மீதி உள்ளதையும் கிராமத்து நடையிலேயே கொடுத்திருக்கலாமே!! இருந்தாலும்... கதை முடியும் பொழுது ஏற்படும் கனம் மட்டும் இன்னும் குறையலை!!

நல்ல சிறப்பான சிறுகதை எழுத்தாளர் ஆகிட்டு இருக்கீங்க !!!

ஆ.சுதா said...

படிக்க அருமை இருந்தது, நல்லா எழுதி இருக்கீங்க,
|போட்டுட்டேல|
|ஏலே| |கொமாரு|
எங்க ஊரு பாசையில அழகா எழுதியிருக்கீங்க.

|தூக்குவாளி|
|வெண்ணி|
இந்த பெயர்களெல்லாம் இன்னும் எழுத்தில் வருவது மனதுக்கு ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி.

ரொம்ப நல்லா இருந்திச்சீங்க
மிகவும் ரசித்து படித்தேன்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

\\கொல்லைப்புரத்தில் நின்றிருந்த செவ்வந்தி,தலையிலிருந்த மல்லியை ஒவ்வொன்றாய் பிய்த்துக்கொண்டிருந்தாள்\\

கதைய முடிச்சிருக்க விதம் அருமை...

ஆனா கதையில ஏதோ குறையுறமாதரி எனக்கு தோனுது...

அதற்க்கு காரணம், இறுதி நான்கைந்து வரிகளாக இருக்கலாம்...

Sathik Ali said...

ரொம்ப லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும்.கிராமத்து பேச்சு,கதை சொல்லிய விதம் ,கதாபாத்திரங்கள் எல்லாம் ரொம்ப அருமை. ..கீப் இட் அப்..

SK said...

நடை நல்லா இருந்தது.