Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Thursday, April 28, 2016

மீராவின் குழலோசை

பெங்களூரின் குளிரையும்  தாண்டி, மண்டபத்தின் ஒலிப்பெருக்கியில் இருந்து மிதந்துவரும் நாதஸ்வர ஓசை, என் ரகசிய நினைவுகளை கிளறி, என்னை தடுமாறச் செய்து கொண்டிருந்தது.  இன்னும் சிறிது நேரத்தில் எனக்கும் என் அத்தை பெண் வசுந்தராவுக்கும் திருமணம்.

நேற்று அடித்த ஜானி வாக்கரின் போதை தெளியாமல் அரவிந்தும் இஸ்மாயிலும் என் கட்டிலின் அருகே  கவிழ்ந்து படுத்திருந்தனர். நான் மாப்பிள்ளை என்பதால், அளவாகவே எனக்கு போதை தரப்பட்டது. தரப்பட்டது என்பதைவிட தந்துகொண்டேன் என்றும் சொல்லலாம். காரணம் மீரா.

பெயரைக் கேட்டவுடன், சாந்தமான முகத்துடன் கையில் தம்புராவோடு  காவி நிற சேலையில்,  கண்ணனுக்காக  காத்து கொண்டிருந்த மீரா உங்களுக்கு ஞாபகத்திற்கு வரலாம்.



என் மீராவும் அப்படித்தான். ஆனால் ரகசிய புன்னகையுடன் கையில் புல்லாங்குழலோடு , காட்டன் புடவையில்  இருப்பாள். அவள் வாசிப்பது என்ன ராகம் என்ன தாளம் என்றெல்லாம் தெரியாது. ஆனால் கேட்கும் போது மிகவும் சுகமாய் இருக்கும் இளையராஜாவின் பாடல்கள் போல. உடல் எடை குறைந்து, பறவையின் இறகைப்போல, காற்றிலே மிதந்து சென்று அவளை சுற்றி சுற்றி வருவது போல இருக்கும்.

இதுநாள் வரையில் நான் அவளிடம் பேசியது கிடையாது. ஆனால் அவளை எனக்கு பிடிக்கும். என்னையும் அவளுக்கு பிடிக்கும்.

மதுரையில், கல்லூரியில் படிக்கும் போதுதான், இதோ கீழே கவிழ்ந்து கிடக்குறானே அரவிந்த், எனக்கு அறிமுகம் ஆனான். நன்றாக மிருதங்கம் வாசிப்பான். ஆனால் எனக்கு அந்த சப்தம் பிடிக்காது. ஏதோ கடாமுடாவென்று காதை அடைப்பது போலிருக்கும். கல்லூரி செல்லும் நாட்களில்,  அவனது வீட்டுக்கு சென்றுவிட்டு தான் கல்லூரிக்கே போவோம். ஏனெனில் அவனது வீடு கல்லூரியின் பின் வளாக தெருவில், வேப்ப மரங்கள் அடர்ந்த முனையில் இருந்தது. நான் செல்வதற்கு முன்பாகவே கதிரும் இஸ்மாயிலும் அவனது வீட்டிற்கு வந்து விடுவார்கள்.

அரவிந்தின் வீடு மிகவும் அழகாகவும் விசாலமாகவும் இருக்கும்.  தாமரைப்பூ வேலைப்பாடு அமைந்த கிரில்லின் கேட்டை இணைத்து எழுப்பப்பட்ட மதிலில், இரு பக்கமும் கரு நிறத்து  யானை சிலைகள் இருக்கும். குட்டி யானைகள் இரண்டு காவலுக்கு நிற்பது போன்ற பிரம்மை கூட எனக்கு அடிக்கடி தோன்றும்.

கிரில்லை தாண்டி படியேறி வீட்டிற்குள் செல்வதற்கு எப்படியும் இரண்டு நிமிடங்கள் ஆகலாம். அவ்வளவு ரம்மியமாக,  நடை பாதையின் இரு புறத்திலும் வண்ண வண்ண பூக்கள் பூத்திருக்கும். ரோஜாவைத் தவிர சத்தியமாக  மற்ற பூக்களின் பெயர்களையெல்லாம் நான் அறிந்திருக்கவில்லை. சில நேரங்களில், அப்பூக்களின் மேல் சுற்றி திரியும் வண்டுகளை கண்டு மெய் மறந்து ரசித்திருக்கிறேன். அதெல்லாம் பழைய கதை.

சொல்ல மறந்து விட்டேனே அரவிந்தின் அக்காதான் மீரா.  இரண்டு வயது மூத்தவள். காதில் தேன் பாய்வது போன்று புல்லாங்குழல் வாசிப்பாள். காற்றுக்கும் அவளுக்கும் ரகசிய சம்பாஷனை நடப்பது போலிருக்கும்.  உடனே உங்களது எண்ணங்கள் தாறுமாறாக செல்வதை என்னால் உணர முடிகிறது. நானும் மீராவும் காதலித்து, பின் பெற்றவர்களுக்கு தெரியவந்து பிரச்சனையாகி பிரிந்துவிட்டோம் என்று.

இல்லை. நாங்கள் காதலிக்க வில்லை. எங்களுக்குள்  அந்த எண்ணமும் இருந்ததில்லை. ஒருவேளை, மீரா என்னை விட மூத்தவள் என்பதாலோ என்னவோ தெரியவில்லை.

ஒருநாள், பிராக்டிகல் தேர்வு முடிந்து நானும் கதிரும் சீக்கிரமே கிளம்பி விட்டோம். அரவிந்தின் வீட்டை கடந்துதான் செல்ல வேண்டும். வீட்டின் அருகே செல்ல செல்ல, குழலின் ஓசை மாடியிலிருந்து எங்களை அழைத்தது. நானும் கதிரும் அண்ணாந்து மேலே பார்த்தோம். வேப்பம்பூக்களோடு இருந்த சில கிளைகள் மறைத்திருக்க,  மாடியறையின் ஜன்னல் வழியே மீராவின் முகம். தன்னை மறந்து புல்லாங்குழல் வாசித்து கொண்டிருந்தாள். ஏனோ அந்த குழலோசை, ஒரு ரகசிய அழைப்பை  எனக்காக தூது விடுப்பது போல இருந்தது.

சட்டென்று  சொல்லவொன்னா  தவிப்பு என்னுள். குளிர்ந்த காற்று விர்ரென கிளம்பி, என் ஆடைக்குள் புகுந்து ஜில்லிட செய்வது போலிருந்தது. என்னவென்று சொல்ல தெரியவில்லை.  இந்த உணர்வு ஒருவித புது பரவசத்தை என்னுள்  விதைக்க ஆரம்பித்திருந்தது . ஆனால் அது காதலில்லை என்று, மனதுக்குள்  திரும்ப திரும்ப சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

கதிர்தான் அழைத்தான். " வாடா, அரவிந்த் வரவரைக்கும் இங்கேயே வெயிட் பண்ணலாம்" என்று.  என்னால் மறுக்க முடியவில்லை.  மறுக்க முடியவில்லை என்பதை விட மகிழ்ந்தேன் என்பதுதான் பொருத்தமாய் இருக்கும்.  அரவிந்தின் அம்மாவை பற்றி பிரச்சனை இல்லை, தானுண்டு சமையலுண்டு என்றிருப்பார்.

ஆதலால், அரவிந்த் வீட்டு ஹாலில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்தபடியே நானும் கதிரும் பேசிக்கொண்டிருந்தோம். ஆனாலும் என் மனமெல்லாம் குழலின் ஓசை வழியே பயணித்துக் கொண்டிருந்தது.  ஏனோ அவ்வோசை என் நெஞ்சை அடைப்பது போலவும்,  வா வா என்று அழைப்பது போலவும் இருந்தது. சட்டென்று கதிரின் கையை பிடித்து " வாடா போகலாம்" என்று சொல்லி, விறு விறுவென்று வெளியே நடந்தேன்.

கிரில்லை கடந்து சாலையில் வந்தவுடன், மேலே நிமிர்ந்து பார்த்தேன். மீராவும் என்னை பார்த்தாள். வாசிப்பதை நிறுத்தியிருந்தாள். அவள் உதட்டோரம் பூத்த புன்னகை என்னை ஆவேசப்படுத்தியது. ஓடாத குறையாக வீடு வந்து சேர்ந்தேன். அதற்கு பிறகான நாட்கள், என் வாழ்வில் மறக்கமுடியா தருணங்களாகும் என கனவிலும் நினைக்கவில்லை.

அரவிந்த் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் மீரா என் கண்ணில் பட்டாள். கண்ணில் பட்டாளா அல்லது என் கண்ணில் படுவதற்காக வந்தாளா  என்று இன்றுவரை எனக்கு தெரியாது. உதட்டோரம் அதே ரகசிய புன்னகை.  நானும் புன்னகைத்து வைத்தேன் படபடப்போடு.

அரவிந்த் வீட்டில், தேர்வுக்கு சேர்ந்து படிக்கும் நாட்களில் எல்லாம் மீராவின் குழலோசை பின்னணி இசையை போல ஒலிக்கும். சில சமயங்களில், அந்த ஓசை இல்லாமல் படிக்க முடியாதோ என்று கூட தோன்றும்.  தன் அக்காவை பற்றி பேசும் ஒரு சந்தர்ப்பத்தில்,  அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டிருப்பதாக அரவிந்த் கூறினான்.  கொஞ்சம் நிம்மதியாகவும் நிறைய கவலையாகவும் இருந்தது.

ஒரு நாள், பல கதைகளில்  வருவது போன்று, ஒரு மழை நேரத்து மாலைப் பொழுது. நான், கதிர், அரவிந்த் மூவரும்  எப்பொழுதும் போல் அரவிந்த் வீட்டில் தேர்வுக்கு படித்து கொண்டிருந்தோம். மேகங்கள் இருட்டி கொண்டு வந்து சில்லென்று காற்று வீசியது.  மழைத்தூறல்களோடு சேர்ந்து மரக்கிளைகளும் ஆடுவது ஜன்னலின் வழியே ரம்மியமாய் தெரிந்தது.

மீரா எப்பொழுதும் போல வாசிக்க தொடங்கியிருந்தாள்.  ஐசொமெரிசத்தில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. ஐஸாகி கொண்டிருக்கும் என் மனமும் உடலும் பதற ஆரம்பித்தது. எழுந்து பாத்ரூம் நோக்கி செல்ல ஆரம்பித்தேன். அவளின் அறையை கடந்து தான் செல்ல வேண்டும். மெதுவாக நடந்து, திறந்திருந்த அவளது அறையின் முன் நின்றேன். என்னைப் பார்த்ததும்,வாசிப்பதை நிறுத்தி,  கட்டிலில் இருந்து எழுந்து,  என்ன என்பது போல் பார்த்தாள்.


உதட்டோரம் அதே ரகசிய புன்னகை. அசையாமல் நின்றேன். அவளும் கூட. மெதுவாக அறைக்குள் நடந்தேன். ஜன்னல் கம்பியின் வழியே படர்ந்திருந்த முல்லை பூவின் வாசம் அறை முழுதும் நிரம்பியிருந்தது. அவளது கண்ணில் எந்த பதட்டமும் இருந்ததாக தெரியவில்லை. அவளின் அருகே சென்றேன். ஜவ்வாதும் பாண்ட்சும் கலந்த மனம் அவளிடமிருந்து.

என்ன செய்வது என்று தெரியவில்லை. சட்டென்று அவளை அணைத்து இதழோடு முத்தமிட்டேன். அவள் எதிர்க்கவில்லை. அமைதியாக கண்மூடி நின்றாள். எனக்கு மூச்சு அடைப்பது போலிருந்தது. வேகமாக வெளியே சென்று திரும்பி பார்த்தேன். அவளிடமிருந்து அதே ரகசிய புன்னகை . இம்முறை புன்னகை என்பதைவிட சிரிப்பு என்றே சொல்லலாம்.

என்னால் தாங்க முடியவில்லை. இதயம் வெடித்து விடும் போலிருந்தது. அரவிந்திடம் குடை வாங்கி கொண்டு  மழையில் நனைந்தபடியே வீடு வந்து சேர்ந்தேன். ஒருவாரமாக அவனது வீட்டு பக்கம் செல்ல வில்லை. அரவிந்திடம் சொல்லி இருப்பாளோ அல்லது தற்கொலை ஏதும் செய்து கொள்வாளோ என்ற பயம் வயிற்றை கவ்வியது.

ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை. இயல்பாகவே நாட்கள் நகர்ந்தன. அரவிந்த் எப்பொழுதும் போலவே பழகியது சிறிது நிம்மதியை கொடுத்தது. அதற்கு அடுத்தடுத்த நாட்களில் அவனுடைய வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தேன். எப்பொழுதும் போல் பூக்கள் பூத்திருந்தன. புல்லாங்குழல் இசை கேட்டு கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது வேறு மாதிரியாக மலை முகடுகளின் இடையே சோவென்று விழும் அருவியை போல ஒலித்தது.

என் கண்கள் மீராவை தேடின. அவள் வந்தாள். புன்னகைத்தாள். நானும் புன்னகைத்தேன். அரவிந்த் கவனிக்காத சில நேரங்களில், புருவத்தை உயர்த்தி என்ன என்பது போல பாவனை செய்தாள்.  தொண்டைக்குள் இருந்து தீ பரவி கீழே இறங்குவது போலிருந்தது. அமைதியாக கீழே குனிந்து கொண்டேன்.

ஒருநாள், அரவிந்த் அவனது புத்தகத்தை எடுக்க போயிருந்த வேளையில், ஊஞ்சலில் சாய்ந்து நின்று  கொண்டு ,வாசலில்  வரைந்திருந்த கோலத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தேன்.  திடீரென மீரா அருகே வந்தாள்.  நான் நிதானித்து விலகுவதற்குள் , என்னை  அணைத்து என் இதழில் முத்தமிட்டாள். மழையோடு ஐஸ் க்ரீம்  சாப்பிடுவது  போன்ற நடுக்கம் என்னுள். பின்பு ஏதும் நடக்காதது போல , உள்ளே சென்று குழல் வாசிக்க ஆரம்பித்து விட்டாள். எனக்குத்தான் பிரம்மை பிடித்தது போலிருந்தது.

அதற்கு பிறகு, அவனது வீட்டிற்கு போக கூடாது என்று முடிவெடுப்பதும், மீறி போகும் போதெல்லாம், சட்டென்று வந்து கொடுக்கும்  மீராவின் முத்தமும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது . கல்லூரி முடிந்து செல்லும் கடைசி நாளில் கூட அவளுடைய முத்தம் என் இதழையும் இதயத்தையும் நனைத்தது. அதுதான் அவளது கடைசி முத்தம்.

அதன் பிறகு, மீராவை சந்தித்து இன்றோடு ஐந்து வருடங்கள் சொச்சம்  ஆகிவிட்டன. மீராவின் திருமண பத்திரிக்கையை கூட அரவிந்த் நேரே வந்து கொடுத்தான். ஏனோ எனக்கு போக பிடிக்கவில்லை.

அதன் பிறகு, வேலை, சேமிப்பு, குடும்பம்  என்று என் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. மீராவை மறந்து போயிருந்தேன் என்று சொல்வதெல்லாம் பொய். எந்த படத்தில்  முத்தக் காட்சியைப் பார்த்தாலும், எங்கெல்லாம் வாத்திய கருவிகளின் இசையை கேட்டாலும் அவளது ஞாபகம் வரும். அவளும் என்னை நினைத்துக்கொள்வாள் என்ற நினைப்பு கூட எனக்கு சந்தோசத்தை கொடுத்தது.

வசுந்தராவுக்கும் எனக்கும் திருமண பத்திரிகை பிரண்ட் ஆகி வந்ததும், மறக்காமல் அரவிந்திடம் அட்ரஸ் வாங்கி, நெய்வேலியில் இருக்கும் மீராவிற்கு அனுப்பி வைத்தேன். இதோ இன்னும் சிறிது நேரத்தில் மீரா வந்து விடுவாள். ஏனோ அர்த்தமில்லா ஓர் பயமும், படபடப்பும், மகிழ்ச்சியும்  கலர்ந்த உணர்வு என்னுள் பரவ ஆரம்பித்தது. திருமண பரிசாக ஒரு முத்தத்தை தந்துவிடுவாளோ என்ற சந்தேகம் கூட அதற்கு காரணமாய் இருக்கலாம்.

மண்டபம் மனித தலைகளால் நிறைய ஆரம்பித்தது. அனைவரின் ஆசியோடும், கெட்டி மேளமும் நாதஸ்வரமும்  ஒலிக்க வசுந்தராவின் கழுத்தில் தாலி கட்டினேன்.  நான்காவது வரிசையில் அமர்ந்திருந்த மீராவின் வாழ்த்துக்கள், அட்சதையின் மூலம் என்னை வந்து சேர்ந்தது. மீரா மிக நேர்த்தியாய் இளஞ்சிவப்பு காட்டன் புடவை கட்டி இருந்தாள். கையில் புல்லாங்குழல் இருக்கிறதா என்று  சந்தேகத்தோடு தேடினேன். நான் தேடியது அவளுக்கு புரிந்திருக்கும் போல. மெலிதாக புன்னகைத்தாள். அதே ரகசிய புன்னகை. நானும் புன்னகைத்தேன். கையில் எனக்காக பச்சை வண்ண பெட்டியில் பரிசு வாங்கி வந்திருந்தாள்.

வரிசையில் நின்று வசுந்தராவிற்கு  வாழ்த்து சொல்லி, என் கையில் பரிசை தந்து விட்டு, அதே உதட்டோர ரகசிய  புன்னகையுடன் கும்பலில் காணாமல் போனாள் மீரா.  என் கண்கள் அவளை தேடின. ஆனால் அவள் தென்படவில்லை . உடை மாற்றும் சாக்கில், அறைக்குள்  வந்து மீராவின் பரிசை பிரித்துப் பார்த்தேன். சட்டென்று விழியோரம் சிறு துளிகள் எட்டி பார்த்து கண்களை மறைத்தது. அவற்றை துடைக்க மனம் வரவில்லை. பெட்டியில் மஞ்சள் வெல்வெட் துணியில், புல்லாங்குழல் ஒன்று மயிலிறகோடு சுற்றி இருந்தது. மீராவுக்கு தெரியும் நான்  ஒவ்வொரு முறையும் இந்த புல்லாங்குழலை கையில் எடுக்கும் பொழுதெல்லாம் எதை நினைத்துக்கொள்வேன் என்று. சிறு புன்னகை என் உதட்டோரம் தவழ துவங்கியிருந்தது. மீராவின் ரகசிய புன்னகை போல.



Monday, December 16, 2013

அம்மாவின் மனசு

கலைந்து  கிடக்கும் காட்டன் புடவைகளை மடித்தபடியே , கண்ணாடி ஜன்னலின் வழியே வெளியே பார்த்தான் திருப்பதி. வானின் வெள்ளிக்கம்பிகள் பூமியை நனைத்துக் கொண்டிருந்தன .சாரலையும் பொருட்படுத்தாமல் ஆண்களும் பெண்களும், பொங்கலுக்கு துணிமணிகள் வாங்க , அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தனர்.

ஒரு அம்மாவின் கையிலிருந்த குழந்தை , ஆவலோடு தன்  கையை நீட்டியும் , கண்களை விரித்தும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது .அவரும் புரிந்துவிட்ட  ஜாடையில் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார். திருப்பதிக்கு  சட்டென்று தன்  அம்மாவின் ஞாபகம் வந்தது.

சென்னையில் , மிகவும் பிரபலமில்லாமல் இருக்கும் இந்த துணிக்கடைக்கு அவன் வேலைக்கு சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது . தன் வீட்டு கஷ்ட ஜீவனத்தைக் கண்டு , சமூக அறிவியல் வாத்தியார்தான் தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி இங்கு வேலைக்கு சேர்த்து விட்டார் . இந்த நான்கு வருடத்தில் , பொங்கலுக்கு மட்டும்தான் ஒரு வாரம் லீவு எடுத்துக் கொள்வான் . மற்றபடி முன்னூற்றி ஐம்பத்தியெட்டு நாட்களும் இந்த கடைதான் அவன் உலகம்.


திருப்பதிக்கு சொந்த ஊர் சிவகாசியில் இருக்கும் வேட்டுவபாளையம் எனும்  கிராமம். அப்பா கிடையாது. அம்மாவுக்கு கண்ணில்  பார்வை மங்கிவிட்டதால்  வீட்டிலேயே இருக்கிறாள். சுமதி வசந்தி என்று இரண்டு தங்கைகள். 

 திருப்பதி பத்தாவது செல்லும் வரை அம்மா தான் வீட்டின் ஆணிவேர். தீப்பட்டி  தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தாள். எப்படியாவது கஷ்டப்பட்டு, பிள்ளைகளை படிக்க வைத்து மேடேற்றி விடவேண்டும்  என்பது அவளது கனவாய் இருந்தது. ஆனால் அவள் கனவு  கலைந்தது போல ஒரு நாள் அவள் வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட  தீ விபத்து  அவள் கண் பார்வையை முக்கால்வாசி பறித்துக்கொண்டது . அவள் வேலை பார்த்த கம்பெனியோ ஒரு சிறு தொகையை வைத்தியத்துக்காக  கொடுத்து விட்டு  விலகிக் கொண்டது . அன்றிலிருந்து திருப்பதி  அவ்வீட்டின் ஆணிவேர் ஆனான்.அவன் அனுப்பும் சம்பளம் தான்  , அவர்கள் வீட்டின் நீருற்று .


 'இந்த பொங்கலுக்கு போகும்போது அம்மாவுக்கு பட்டு புடவை எடுத்துட்டு போகணும். போன பொங்கலுக்கு வாங்க நினைத்தது. சுமதியின் சடங்கிற்கு செலவாகிவிட்டது . அதற்கு முந்திய பொங்கலுக்கும்  வாங்க நினைத்து வைத்திருந்த பணம், ஆஸ்பத்திரி செலவுக்கு போய்விட்டது .எப்படியோ இந்த பொங்கலுக்காவது  கண்டிப்பாக வாங்கிட்டு போகணும'என்று  நினைத்துக் கொண்டே மடித்த புடவைகளை , வரிசையாக ராக்கரில் அடுக்கி வைத்தான் திருப்பதி.ஆனந்த சிரிப்போடு தங்கைகளின் முகங்களும் அவன் கண்ணில் நிழலாடின.


"ஏம்ம்பா திருப்பதி..உன்னை ரவி சார் கூப்பிடுறார் "- மூன்றாவது மாடியில் ரெடிமேட் செக்சனில் இருக்கும் சுப்பையா அண்ணன் சொல்லிவிட்டு போனார்.

"இதோ வரேன்ணே "-- அவசர அவசரமாக தன்னுடைய இடத்தில் எல்லாம் சரியா அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, கேசியர் ரவியைப்  பார்க்க கிளம்பினான் திருப்பதி.

என்ன தம்பி ஊருக்கு கிளம்பியாச்சா ? எப்போ வண்டி ?-ரவி 

இன்னைக்கு  நைட்டுக்கு சார் .- திருப்பதி.

எப்போ ரிட்டன்?
அடுத்த சனிக்கிழமை வந்துடுவேன் சார்.

ம்ம். சரி .அப்புறம் உன் சீட்டு காசுக்கு துணி எடுத்துகிறியா ? இல்ல பணமா
தந்துறதா?

இல்ல சார் ..டிரஸ் ஆவே எடுத்துக்குறேன்..

சரிப்பா .சர்விஸ் சார்ஜ் கழிச்சது போக மொத்தம் 1850 ரூபாய் இருக்கு. 2500  குள்ள துணி வாங்கிக்க.. பில்ல இங்க வந்து கொடு .  பேலன்ஸ  அடுத்த மாசத்துல கணக்கு பண்ணிக்கலாம் 

சரிங்க சார்  .

பட்டு புடைவை செக்சனில் அரை மணி நேரமாய் தேடி துலாவி 2600க்கு அழகிய நீலக்கலரில் மயில் தோகை பார்டரில் ஒரு புடவையை வாங்கினான். மறக்காமல் ப்ளவ்ஸ் பீஸ் கட் செய்து கொண்டு, முந்தி முடிச்சும்  போட்டு எடுத்து கொண்டான்.


கேண்டினில் சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு வந்த திருப்பதி,  சூட்கேசில் அம்மாவிற்காக  வாங்கிய புடவையையும் , தங்கைகளுக்கு வாங்கிய சுடிதார் ,வளையல் கம்மல் களையும் அழகாக அடுக்கி வைத்து எடுத்துக்கொண்டான் .

நாளை காலை வீட்டில் இருப்போம் .நினைக்கும் போதே சந்தோசமாக இருந்தது. ஒருவேளை அம்மாவிற்கு கண் நன்றாக இருந்திருந்தால் இந்நேரம் காலேஜில் இருந்து வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்திருப்பான் . என்ன.. அம்மா எனக்கு டிரஸ் வாங்கி வைத்திருப்பாள் என்று நினைத்துக்கொண்டே  சிவகாசி செல்லும் இரவு பேருந்தில் ஏறினான் . நல்ல வேலையாக சீட் கிடைத்தது .டிவியில் பலரும் கோட் சூட் போட்டபடி நடந்து கொண்டு இருந்தனர் .இவன் டிவியை விடுத்து, வெளியே இருட்டில் கடந்து போகும் வெளிச்சங்களை நோக்கினான்.

 இவன் ஆசையாய் வாங்கி வைத்திருக்கும் இந்த பட்டு புடவையை  ,சந்தோசமாய்  அம்மா பொங்கலுக்கு  கட்ட போவதை நினைத்து மகிழ்ந்து கொண்டான். தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அம்மா கட்ட போகும் முதல் பட்டு புடவை இது . அதுவும் அவளுக்கு பிடித்த கலரில். மிகவும் பெருமையாக இருந்தது அவனுள். பல எண்ணங்களை அசை போட்டபடியே பேருந்தின் தாலாட்டில் தூங்கியும் போனான்.

அம்மா - திருப்பதியின் குரல் கேட்டு திண்ணையில் இருந்து எழுத்து வந்த அவன் அம்மா அவன் கைகளை கெட்டியாக பிடித்தபடி வாப்பா திரு வாய்யா என்றபடி உள்ளே அழைத்து சென்றாள்.
எப்படி பா இருக்க?

நல்ல இருக்கேன்மா . நீங்க எப்படிமா இருக்கீங்க

நல்ல இருக்கேன்பா 

எங்க சுமதி வசந்தி ? என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவர்கள் இருவரும் அண்ணனின் பக்கத்தில் வந்து அமர்ந்தனர்.

என்னணே ..பொங்கல் எல்லாம் வந்துடுச்சா? என்றபடி சந்தோசமாய் அண்ணனை வரவேற்றனர்.


ஓ வந்துடுச்சே என்றபடி சூட்கேசை திறந்து சுடிதார்களை எடுத்து நீட்டினான் .

 இந்தாங்க உங்க ரெண்டு பேருக்கும் சுடிதார்,கம்மல் .

ஹய்யா என்றபடி ஆர்வமாக இருவரும் சுடிதாரை வாங்கிகொண்டனர்.

பிறகு அம்மாவிடம் திரும்பி 'இந்தாங்கம்மா. இது உங்களுக்கு.பட்டு புடவை. பிடிச்சிருக்கா  பாருங்க ' என்று அம்மாவின் கைகளில் கொடுத்தான்.

ஐ அம்மாவுக்கு பட்டு புடவை என்றபடி சுமதியும் வசம்தியும் புடவையை பிரித்து பார்க்க ஆரம்பித்தனர்.


சேலை நல்லா  இருக்கு திருப்பதி. ஆனா கண்ணு தெரியாத காலத்துல எனக்கு எதுக்கு  இதெல்லாம் .. சுமதிக்கு நல்லா இருக்கும்.வயசுப்புள்ள வேற.. அவ கட்டிகிடட்டும் என்றபடி சுமதியின் தலையை வருடியபடி , அவளின் கைகளில்  பாசத்தோடு  புடவையை கொடுத்தாள் அம்மா.


திருப்பதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. திடீரென்று எதிர்பார்க்காத அம்மாவின் இச்செயல், அவனுள், அவனுக்கு மட்டுமே தெரிந்த மிகவும்  மெல்லிய  கர்வமெனும் நூலை அறுத்து விட்டு போனது .
சட்டென்று அமைதியாகி விட்ட திருப்பதியை பார்த்த அம்மா 'என்னப்பா உடம்புக்கு ஏதும் பண்ணுதா?' என்றாள் பதை பதைத்தபடி .

'இல்லம்மா ஒன்னும் இல்ல' என்றபடி அம்மாவின் மனசை அறிந்த திருப்தியில்  ' இன்னைக்கு சாயங்காலம் டவுனுக்கு போய்  அம்மாவுக்கு நல்ல காட்டன் புடவை வாங்க வேண்டும்' என்று நினைத்து கொண்டான். அவன் மனதில் பொங்கல் பொங்க தொடங்கியது.

Thursday, June 18, 2009

உங்களுக்காக ஒரு ரொமான்ஸ் பதிவு...


தொயந்து சோகமாவே எழுதி, அல்லாத்துக்கும் அழுகாச்சி காட்டுனதால,நெறைய பேர் நொந்து போயிருக்கீங்கனு கமெண்ட்டு,மெயில பாத்தாலே தெரியுது மக்கா...அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துக்கினேன்.இந்த பதிவுல தம்மாத்துண்டு இயத்துலகூட சோகாச்சி வரக்கூடாதுன்னு முடிவு கட்டிக்கினேன்.அத்தால உங்க எல்லாத்துக்கும் ஷோக்கா அதான்பா இன்கிலிபீச்சுல ரொமாண்டிக்கா ஒரு கத சொல்றேன் கேட்டுக்கோ..கத சொல்லும்போச்சு மட்டும் நான் தெளிவாத்தான் சொல்லுவேன்.அதால யாரும் கிராஸ் கொஸ்டின்னெல்லாம் கேக்ககூடாது..சொல்லட்டா......
கதை:
கழுத்தில் புது மஞ்சள் சரடு மின்ன ,கணவன் செந்திலோடு ஒட்டி நடந்தாள் சுந்தரி.நேற்றுதான் திருமணம் நடந்தது.ஈவின்ங் ஷோவிற்கு இரண்டு டிக்கெட்களை எடுத்துக்கொண்டு ,சுந்தரியை உரசியபடியே நடந்தான் செந்தில்.அவளுடைய சரிகை நெய்த அரக்கு கலர் சேலை அவனுடைய கைகளில் உரசி,அவனை கிறங்க வைத்தது.அவளிடமிருந்து வந்த மல்லிகை மணமும் , மஞ்சள் மணமும் அவனை மோகக்கடலில் மூழ்கச்செய்தன. வீட்டிலேயெ இருந்திருக்கலாமோ என்று அடிக்கடி அவனது உள்மனது கூறியது. சுந்தரியுடன் நடந்து செல்வதே அவனுக்கு சொர்க்கத்தில் நடப்பது போலிருந்தது.தியேட்டருக்குள் நுழைந்ததும் அவளின் மெல்லிய விரல்களோடு தன் கைகளை பிணைத்து கொண்டான்.சுந்தரி கைகளை வெட்கத்துடன் விடுவிக்க முயன்றாள்.உடனே கைகளின் இறுக்கத்தை அதிகபடுத்தினான் செந்தில்.சுந்தரியின் முகம் நாணத்தில் சிவந்து இருட்டில் கூட ஒளி காட்டியது.

ஹலோ இன்னா எல்லாரும் கத வாசிக்கிரீங்களா...புடிச்சிருக்கா..என்னாது நான் வர்ரதுதான் புடிக்கலியா..என்னாப்பா இப்பூடி சொல்லிட்டீக..சரி நான் நடய கட்டுறேன்
.

கதை தொடர்கிறது:
இருவரும் சீட்டில் வந்து அமர்ந்தனர்.திரையில் விக்கோ பல்பொடி விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.கண்களில் பெருமை பொங்க சுந்தரியையே பார்த்தான் செந்தில்.அவன் கவனிப்பதை உணர்ந்த சுந்தரி அவனிடம் திரும்பி வெட்கத்துடன் “என்னங்க?” என்றாள்.
“ஒண்ணுமில்லை .நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்” என்றாவாறே அவளுடைய காதுமடலருகே தொங்கும் முடியை எடுத்து சரிசெய்தான் .
அதற்கு ஒரு புன்னகையை பதிலாய் தந்தாள் அவள்.
படம் ஆரம்பித்தது.தன்னுடைய இடது கையை தூக்கி அவளுடைய சேரின் மேல் வைத்து ,அவளை அணைத்துக்கொள்வதை போல் அமர்ந்தான்.அவளும் அதை விரும்புவதுபோல சற்றே இறங்கி அமர்ந்து, மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.

இன்னாப்பா எல்லாரும் தொயந்து படிக்கிரீகளா?? இன்னாது இடலே டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?? சரி சரி அஜ்ஜஸ் பண்ணிக்கோ.இதோ நான் கிளம்பிட்டேன்..

திரைப்படம் ஓடுவதையே மறந்து இருவரும் ஒருவரையொருவர் மனதிற்குள் நினைத்துக்கொண்டு ஆனந்தப்பட்டனர்.பாடல் காட்சிகளின்போது அவளுடைய கைவிரல்களோடு நாட்டியமாடினான் செந்தில்.சுந்தரி வெட்கத்துடன் கையை விடுவித்துக்கொண்டாள்.
“ஏன்??”-செந்தில்.
“யாராவது பார்க்கபோறாங்க!”-சுந்தரி
“பார்க்கட்டுமே..அதுக்குத்தான் உன் கழுத்துல நான் கட்டின லைசென்ஸ் இருக்கே! “ - செந்தில்.
“அதுக்காக தியேட்டர்லயா?? “ - சுந்தரி.
“அப்போ வீட்டுல வச்சுக்கலாமா ! ம் சொல்லு “ என்று குறும்புடன் கேட்டான் செந்தில்.

கன்னம் சிவந்து நாணத்துடன் அவனுடைய தோளில் சாய்ந்தாள் சுந்தரி. பூக்களை வருடும் இளங்காற்றாக அவளுடைய தலையை கோதினான் செந்தில்.சின்ன சின்ன சீண்டல்களிலும் தீண்டல்களிலும் உலகை மறந்தனர்.படத்தின் கதை என்ன என்பது கூட அறியாமல்,திரையரங்கை விட்டு வெளியே வந்தனர்.மூன்று மணிநேரம் மூன்று நொடிகளாய் மாறிப்போனதை நினைத்து இருவருமே வருந்தினர்.

“சுந்தரி. இன்னைக்கு டின்னருக்கு சரவணபவன் போகலாமா?” காரை
ஸ்டார்ட் செய்து கொண்டே கேட்டான் செந்தில்.
“வேணாங்க..மருமகள் தோசை வார்த்திருப்பாள்.நாம் வீட்டில் போயே சாப்பிடுவோம்” என்றபடி காரினுள் ஏறியபடி கூறினாள் நேற்று அறுபதாம் கல்யாணம் கொண்டாடிய சுந்தரி.

என்னா மக்கா..படிச்சீங்களா...அழலையே..அதான் அதான் எனக்கு வேணும்.என்ன கொஞ்சம் கோபமா இருப்பீக கதய படிச்சிட்டு..அதுக்கு நான் என்ன செய்யட்டும்.சோகாச்சி இல்லாமத்தான் எழுதுறேன்னு சொன்னேன்..கோவாச்சி இல்லாமன்னு சொல்லலையே..வரட்டா....கனவு காணாம போயி தூங்குங்க...

Tuesday, May 26, 2009

மீனாட்சி அக்கா ....

என் பேரு அபிராமி.எங்க அம்மாவும் அப்பாவும் என்னய அபிராமின்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா எனக்கு எங்க மீனாட்சி அக்கா கூப்பிடுறதுதான் பிடிக்கும்."அபிக்குட்டி" ,"அபிசெல்லம்" ன்னு அடிக்கடி கொஞ்சுவா.எங்க அக்கா ,உயரமா கொஞ்சம் ஒல்லியா ,ரொம்ப அழகா இருப்பா.பல்லெல்லாம் அடுக்கிவச்ச மாதிரி இருக்கும்.எப்பவும் பாவாடை சட்டைதான் போடுவா.ஏதாவது விசேஷத்துக்கு போனா மட்டும் மஞ்ச தாவணியும் , சிவப்பு பூப்போட்ட பாவாடையும் சட்டையும் போடுவா.அவளுக்கு என்னைய விட பலமடங்கு முடி.இடுப்புக்கு கீழ்தான் தொங்கும்.அவ கண்ணு ரெண்டும் பெரிசா மீனு மாதிரி இருக்கும்.அவ கண்ணுக்காகத்தான் "மீனாட்சி" னு பேர் வச்சேன்னு அப்பா ,வீட்டுக்கு வர்றவங்ககிட்டஎல்லாம் சொல்லுவாரு.

எனக்கு எங்க அக்காவ ரொம்ப பிடிக்கும்தான்.ஆனா சிலநேரம் அவளோட சண்டை போடத்தான் ரொம்ப பிடிக்கும்.இப்படித்தான் ஒரு நாளு,எங்க வீட்டு பக்கமா இருக்குர வேப்பமரத்துல ஊஞ்சல் கட்டி ஆடிக்கிட்டு இருந்தோம்.என்னைய வச்சு கொஞ்ச நேரம்தான் ஆட்டினா.அப்பறம் அவளே ரொம்ப நேரம் விளையாடினா. எனக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு.அப்பாகிட்ட சொல்றேன்னு அவகிட்ட டூ விட்டுட்டு அங்க இருந்து நடக்க ஆரம்பிச்சுட்டேன்.எங்க இருந்து வந்ததுனே தெரியல, ஒரு வெள்ள கலர் கோவில்மாடு என் முன்னால ஓடி வந்துட்டு இருந்துச்சு.எனக்கு பயம் பயமா வந்துடுச்சு.”ஓ” னு அழுதிட்டேன்.எங்க அக்காதான் ஊஞ்சல்ல இருந்து குதிச்சு ஓடிவந்து, என்னைய தூக்கிட்டு வளைஞ்சு வளைஞ்சு ஓடி வீட்டுக்கு வந்துட்டா.

வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம்தான் தெரிஞ்சது அவ உள்ளங்கையிலயும்,கால் மொட்டிலயும் சிராய்ப்பு.பாவம் ஊஞ்சல்ல இருந்து கீழ விழுந்துட்டால அதான்.உடனே அவள கட்டிக்கிட்டேன்.எனக்கு எங்க அக்கானா ரொம்ப பிடிக்கும்.சில நாள்லாம், என்னய தொட்டில போட்டு தாலாட்டியிருக்கா.என் வெயிட்டு தாங்காம ரெண்டு நாள்லேயெ அம்மாவோட சேல கிழிஞ்சிடும். அதனால அம்மாகிட்ட திட்டு எல்லாம் வாங்கிருக்கா. நீங்களே சொல்லுங்க,யாராவது ரெண்டாப்பு படிக்கிர புள்ளய தொட்டில்ல போட்டு ஆட்டுவாங்களா?.ஆனா,எனக்கு பிடிக்கும்னு என்ன போட்டு ஆட்டுவா.அவ நல்லவ.

எங்க அப்பா படுக்குற ஈஸி சேருல படுத்துக்குறதுன்னா,அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.அதுலயும் பச்ச கலர் துணிதான் சேருல கட்டியிருக்கனும்னு, அப்பாகிட்ட அடம் பிடிச்சு ரெண்டு உறை வாங்கிட்டா.வாரத்துக்கு ஒருதடவை ,அத துவைச்சும் மாத்திடுவா.அவ ஈஸி சேருல படுத்துருக்கும் போது, நான் போனேனா என்னைய அதுல படுக்க வச்சிட்டு,கீழே உட்கார்ந்துகிட்டு,நிறைய கத சொல்லுவா.எனக்காக,பக்கத்து வீட்டு ரமேஷோட பாலமித்திரா, அம்புலிமாமால்லாம் படிச்சு கத சொல்லிருக்கா.

கடைக்கெல்லாம் போனா,எனக்கு பிடிச்ச தேன்மிட்டாயெல்லாம் வாங்கித்தருவா.எனக்கு காது குத்துன அன்னிக்கு என்னய ஃபுல்லா தூக்கி வச்சுகிட்டே திரிஞ்சா.நான் ஸ்கூலுக்கு போகும் போது,சைடு வகிடெடுத்து,அழகா படிய சீவி,பச்ச கலர் ரிப்பன் கட்டிவிட்டு,ஏதாவது ஒரு பூ வச்சு விடுவா.

ஒருதடவை,எங்க அப்பா அவரோட ஃப்ரண்ட்ஸோட ராமேஸ்வரம் போனாரு.என்னையும் கூப்பிட்டு போயிருந்தாரு.பெரிய பிள்ளைங்கரதால, அக்காவ வரவேணாமுனுட்டாரு.எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனால, ராமேஸ்வரத்துல இருந்து வரும்போது,எனக்கும் அவளுக்கும் ஒரே மாதிரி பாசிமணி வாங்கிட்டு வந்தேன்.அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு.உடனே போட்டுகிட்டா.எனக்கும் போட்டுவிட்டா.

தீபாவளிக்கு முத நாளு,எங்க அம்மா இட்லிக்கு,உரல்ல மாவு அரச்சிகிட்டு இருந்தாங்க.அவ சும்மா இருக்கலாமுல்ல, உடனே அம்மாகிட்ட போயி,”குடும்மா.நான் அரைக்கிறேன்” னு ,பாதிலேயெ எங்கூட விளையாடாம போயிட்டா.கோவம் கோவமா வந்துச்சு.கொஞ்ச நேரம் கழிச்சு, அவ அரைக்கிறத நிறுத்திட்டு,ரெண்டு கையையும் இடப்பக்கமா நெஞ்சுல வச்சுகிட்டு, குனியவும் நிமிரவும் செய்தா.அவ கண்ணெல்லாம் கலங்கிருந்துச்சு. எனக்கு பயமா போயிடுச்சு.அவ பக்கத்துல போயி நின்னுகிட்டேன்.அவ உடனே எங்கிட்ட அம்மாவ கூப்பிட சொன்னா.நானும் ,எங்க அம்மாகிட்ட ஓடிப்போயி சொன்னேன்.என் கையில இருந்த பால்கோவாவெல்லாம் கீழ விழுந்துடுச்சு தெரியுமா!

அப்பறம்,எங்க அம்மாவும் அப்பாவும்.என்னய புஷ்பாக்கா வீட்டுல விட்டுட்டு,வெள்ள கலர் அம்பாஸிடருல அக்காவ கூப்பிட்டுகிட்டு போனாங்க.எனக்கு தூக்கமே வரல .எங்க அக்காவ பாக்கணும் போல இருந்துச்சு.பாவம் அவளுக்கு வலிச்சிருக்கும்ல.

அடுத்த நாள்.எங்க அப்பா மட்டும் வந்து,அம்மா பீரோக்குள்ள இருந்து, எனக்கு டிரஸ்ஸும்,மேரி பிஸ்கட்டும்,புது செப்பு சாமானும் வாங்கி கொடுத்துட்டு, புஷ்பாகா வீட்டுலயே விட்டுட்டு போயிட்டாரு.எனக்கு கஷ்டமா இருந்துச்சு.

ரெண்டு நாள் கழிச்சு, எங்க அப்பா மட்டும் சில ஆளுகள கூப்பிட்டு வந்தாரு.அவங்கெல்லாம் எங்க வீட்டு முன்னாடி கொட்டக போட்டுகிட்டு இருந்தாங்க.எங்க அழகம்மா பாட்டி,பசுபதி சித்தப்பா,கலா சித்தி, முத்தையா பெரியப்பா,ராக்காயி பெரியம்மா, பூமி மாமா.புவாயி அத்த,கயலு, சொர்ணா,நாகலிங்கம் எல்லாரும் வந்திருந்தாங்க.ஆனா யாருமே முன்னமாதிரி என்கிட்ட சிரிச்சு பேசவேயில்ல.என்ன தூக்கி கொஞ்சவும் இல்ல.கயலு மட்டும் என்கிட்ட வந்து கண்ணாம்பொத்தி விளையாடலாமான்னு கேட்டா.நான் “மாட்டேன். வரலை” னு சொல்லிட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு,எங்க வீட்டுக்கு ஒரு கருப்பு கலர் வேனு வந்துச்சு.அதுல இருந்து ,எங்க அம்மா தலைய விரிச்சு போட்டுகிட்டு,நெஞ்சுல அடிச்சிக்கிட்டு ,அழுதுகிட்டே கீழ இறங்குனாங்க.எங்க பெரியம்மா போயி எங்க அம்மாவ பிடிச்சுக்கிட்டாங்க.அப்பறம் எங்க சித்தி,சித்தப்பால்லாம் போயி,வேனுக்குள்ள இருந்து எங்க மீனாட்சி அக்காவ தூக்கிட்டு வந்தாங்க.பிறகு,வெள்ளை துணிபோட்ட சேருல உட்கார வச்சாங்க.

“ஏன் அக்கா நடந்து வரமாட்டேங்குறா??ஏன் யாரையும் பார்க்க மாட்டேங்குறா??ரொம்ப தூங்கிட்டாலோ??”. நான் அவ கைய பிடிச்சு “அக்கா..என்ன ஆச்சு” னு கேட்டேன்.உடனே எங்க சித்தி லூசு என்னய கட்டிபிடிச்சுக்கிட்டு அழ ஆரம்பிச்சுட்டாங்க.ஆனா எனக்கு அழுகையே வரல.நிறைய பேர் வந்து எங்க அக்காவுக்கு ரோஜாப்பூ மாலையெல்லாம் போட்டாங்க.அவளுக்கு ரோஜாப்பூன்னா ரொம்ப பிடிக்கும் தெரியுமா??.

அப்புறம் சொர்ணா எங்கிட்ட வந்து “அபி,இப்பவே உங்க அக்காவ நல்லா பாத்துக்க.அப்பறம் பாக்க முடியாதுன்னு” சொன்னா.எனக்கு உடனே கோவம் வந்துடுச்சு.அவ கைய நல்லா நறுக்குன்னு கிள்ளி வச்சிட்டு,ஓடிப்போயி எங்க அக்காவ கட்டிக்கிட்டேன்.அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு,அவளுக்கு பிடிச்ச கலர் பாயிலேயே தூக்கிகிட்டு போயிட்டாங்க.

சொர்ணா சொன்னது உண்மைதான்.அப்பறம் எங்க அக்காவ பார்க்கவே முடியல.நான் நல்லா படிக்கிறேன்னு எங்க அக்காகிட்ட எப்படி சொல்லுறது.?நான் தேன்மிட்டாய் சாப்பிடுறது இல்லேன்னு எப்படி சொல்லுறது? நான் மட்டும் தனியா ஊஞ்சல்ல ஆடிகிட்டு இருக்கேன்னு எப்படி சொல்லுறது..??

'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Tuesday, May 12, 2009

மறுபடியும் மழைவரும்...


மழைத்தூரல்கள் பூமியை நனைத்துக்கொண்டிருந்தன.ஆதவன் தன் ஆடையை பறிகொடுத்துவிட்டு,மலைமுகடுக்குள் ஒழிந்துகொண்டிருந்தான்.அவனுடன் போர்தொடுத்து ஓய்ந்ததுபோல்,கார் மேகம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அலைபாய்ந்துகொண்டிருந்தது.

திருச்சியில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் சலனமற்று பயணித்துக்கொண்டிருந்தாள் ஜானகி.ஜன்னலில் பட்டு தெறித்த நீர்த்துளிகள் அவளது ஆடையை மட்டும் பதப்படுத்தியிருந்தது.துர்கா,அவளது மூன்றரைவயதுச் செல்வம்,நித்திரைக்கு தன்னையிழந்து,தாயின் மடியில் சுருண்டு படுத்திருந்தாள்.

மேலூரைத்தாண்டி பேருந்து சென்றுகொண்டிருந்தது.”இதோ இன்னும் ஒரு மணி நேரத்தில் வீடு வந்துவிடும்.அப்பாவிடம் என்ன சொல்வேன்? எல்லாம் முடிந்துவிட்டதென்றா? இல்லை...இவை எல்லாம் உங்களால்தானப்பா என்றா?” ஜானகியின் எண்ணங்கள் உருபோட்டுக்கொண்டிருந்தன.மீளாத்துயரத்தில் இருப்பதாய் அவளது கண்கள் அர்த்தம் புகுத்திக்கொண்டிருந்தன.

துர்காவின் தலையை கோதிவிட்டபடியே வெளியே பார்த்தாள்.மழை இன்னும் சிறு நூலாக கோடுபோட்டுக்கொண்டிருந்தது.

அப்பா பஸ்ஸ்டாண்டிற்கு வந்திருப்பார்..அங்கேயே சொல்லிவிடுவதா?இல்லை வீட்டிற்கு போய்விட்டு மெதுவாக சொல்வதா?” முடிவு எடுக்கமுடியாமல் கணகளை மூடி ,தலையை பின்னே சாய்த்து,பெருமூச்சு விட்டாள் ஜானகி.அவளுடைய அசைவில் துர்கா விழித்துக்கொண்டாள்.

அம்மா..தாத்தா வீடு வந்துடுச்சா?”

இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடும்.நீ தூங்காத முழிச்சுக்கோ..”

ம் ம்.மா நான் ஜன்னல் கிட்ட உட்காரட்டா?”

சரி வா” -இருக்கையில் அமர்ந்தபடியே,அவளை தூக்கி மடியில் அமர்த்தி,சற்று நகர்ந்து அமர்ந்து துர்காவை சன்னலோரமாய் உட்காரவைத்தாள் ஜானகி.

ஜன்னல் கம்பிகளில் பட்டுத்தெறித்த நீர் துர்காவை குதுகலப்படுத்திக்கொண்டிருந்தது.

மாட்டுத்தாவணி வந்துருச்சு.இறங்குரவங்க இறங்கிக்கங்க..”-கண்டக்டரின் குரல் ஜானகியையும் சென்றடைந்தது.மேலிருந்த சூட்கேசையும்,பேக்கையும் எடுத்து கீழே வைத்தாள்.தன் கைப்பையையும் பேக்கையும் ஒருகையில் மாட்டிக்கொண்டு,ஒரு கையில் சூட்கேசையும் மறுகையில் துர்காவையும் பிடித்தபடியே கடைசியாக இறங்கினாள்.


சென்றமுறை மதுரை வந்த ஞாபகம் மனதினுள் சுழன்றது.துர்காவை P.K.G சேர்க்க வேண்டும் என்று கூறி ,அப்பாவிடம் 5000 ரூபாய் வாங்கிச்சென்று,அந்த மாத்தில் மளிகை சாமான்,பால்,கேஸ் என்று சமாளித்தது ,அவளது மனத்தில் மறுபடியும் ரணத்தை பதித்தது.

இந்த தடவை என்ன சொல்ல போகிறேன்? கடவுளே.ஏன் என்னை சோதிக்கிற?”மனதிற்குள் முணுமுணுத்தபடியே பஸ்ஸ்டாண்டை விட்டு வெளியே வந்தாள் ஜானகி.

எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் தயாராக நின்றுகொண்டிருந்தார் பரசுராம்.

வாம்மா ஜானு..நல்லாயிருக்கியா?”

ம்.இருகேன்பா..”-தன் குரலில் சுருதி குறைந்துவிட்டதோ என்று அவளுக்கே சந்தேகமாயிருந்த்து.

ஏய் ..துர்காகுட்டி ..இங்க வாங்க..தாத்தாகிட்ட வாங்க
ஓடிசென்று தாத்தாவின் கைகளை பற்றிகொண்டாள் துர்கா.

ஜானு.ஏம்மா ஒருமாதிரி இருக்க?”

வீட்டுல போயி சொல்றேன்ப்பா

மூவரையும் ஏற்றிக்கொண்ட ஆட்டோ மங்களம் இல்லத்தை நோக்கி விரைந்தது.

வாடி ஜானு..இன்னைக்கு வரேன்னு நேத்துதான் போன் பண்ணி சொல்லுர..என்னடி ஆச்சு?”-ஜானகியின் தாய் மங்களம்.

மங்களம்,முதல்ல அவ குளிச்சிட்டு சாப்பிடட்டும்.பிறகு பேசிக்கலாம்என்று அதட்டியபடி ஜானுவை நோக்கிபோம்மா.போயி குளிச்சிட்டு வா!” என்றார் பரசு.

துர்காவிற்கு இட்லி ஊட்டிவிட்டு,சுட்டி டிவி சேனலை அவளுக்கு வைத்துவிட்டு,ஜானுவை நோக்கி,”இப்ப சொல்லுடி ..என்ன பிரச்சனை?”-என்றாள் மங்களம்.

அம்மா..நான் அவரை டைவர்ஸ் பண்ண போறேன்”-இதயத்திலிருந்த மவுனத்தை,தலை குனிந்தபடியே சிறிதாய் கலைத்தாள் ஜானகி.

அடி பாதகத்தி..இப்படி ஒரு விசயத்த சொல்லவா அங்க இருந்து ,நீயும் ஒன் மகளும் கிளம்பி வந்தீங்க

ஆமாமா..நான் அப்பப்ப உங்ககிட்ட பணம் கேட்டு தொந்தரவு பண்றதும் மனசுக்கு கஷ்டமா இருக்கு.எனக்கு பிடிக்கல

அதுக்காக..இதுதான் முடிவா?போ.ஒரு வேலைக்கு போ..நீ சம்பாதிச்சு,உம் பிள்ளையையும் உன் புருசனையும் காப்பாத்து..அது பொம்பளை.அதவிட்டுட்டு டைவர்ஸ் அப்படி இப்படின்னு பேசாத

அம்மாவின் குதர்க்கமான பேச்சில் கூட தன்னுடைய நன்மை இழையோடுவதை கவனிக்க தவறவில்லை ஜானகி.

இல்லம்மா..இனி அவரோட சேர்ந்துவாழ முடியாதுஎன்று தன் புருசனுடைய குடிப்பழக்கத்திலிருந்து,வாடிக்கையாகிவிட்டிருந்தஅந்தமாதிரியான தொடர்புகள் வரைக்கும் கொட்டி தீர்த்த ஜானகியின் கண்களில் தீயின்றி நீரில்லை.

பரசுராம் எதுவும் பேச திராணியற்று அமர்ந்திருந்தார்.”சிறிது குடிப்பழக்கம்தான் .போகப்போக சரியாகி விடும்,எப்படியும் தன் மகள் சரி படுத்திவிடுவாள்என்ற நம்பிக்கையில்,விருப்பமே இல்லாத ஜானுவை கட்டாயப்படுத்தி,தன் பால்ய சினேகிதனின் மகனுக்கு,விவாகம் செய்துவைத்தார்.அது இப்படி முடியும் என்று அவர் சிறிதும் நினைக்கவில்லை.

இதுவரை அதட்டி பேசிக்கொண்டிருந்த மங்களம்,சற்று அருகில் வந்து,”ஜானு..பொம்பளைங்க,ஆம்பிள துணை இல்லாம வாழ்றது கஷ்டம்மா..வாழ்வோ தாழ்வோ அவரோட நீ இருந்தா உனக்கு ஒரு பாதுகாப்பு இருக்கும்மாஎன்றாள்

அம்மா..நான் அதெல்லாம் யோசிச்சிருக்க மாட்டேன்னு நினைக்கிறியா?நிலைமை ரொம்ப மோசம்மா..அவரோட செயலகள் ஒண்ணொண்ணும் கீழ்த்தரமா இருக்கு.எனக்கு துர்காவோட வாழ்க்கைய நினைச்சா ரொம்ப பயமா இருக்கு.இதைவிட்டா எனக்கு வேறு வழி தெரியலம்மா

நாட்கள் உருண்டன.ஞாயிறும் திங்களும் ஜானகியையும் தீண்டின.
அம்மா..நான் ஸ்கூலுக்கு போயிட்டு வர்ரேன்..துர்காவை பார்த்துக்கோங்க..” என்றபடி வெளியே வந்து,செருப்பை மாட்டிக்கொண்டு வாசலைக்கடந்தாள் ஜானகி.

சரிம்மாஎன்று அவளின் நிலையை நினைத்து யாரும் அறியா வண்ணம் கண்களில் நீரை வார்த்தாள் மங்களம்.

தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராய் வேலை செய்யப்போவதை நினைத்து,பெருமிதம் கலந்த சந்தோசம் ஒருபுறம், மறுபுறம்..ம்ஹீம். அதை எப்பவுமே வெளியே சொல்லமாட்டாள் ஜானகி.

பள்ளி அருகில் வந்ததும்,அந்த வீட்டை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள் ஜானகி.கண்கள் யாரையோ தேடின.ஏக்கத்தின் சுவடுகளை உள்ளே மறைத்து
பள்ளியினுள் சென்றாள்.கடிகார முட்கள் செவ்வனே தன் வேலையை செய்தன.

மாலை இருட்டிக்கொண்டு வந்தது.வானவெளியில் முகில்கள் படையெடுத்துச் சென்று கொண்டிருந்தன.சிறு சாரல்துளிகள் மண்வாசனையை ஏற்படுத்த தயாராயின.மாணவர்களோடு கலந்து வெளியே வந்து கொண்டிருந்த ஜானகி,பள்ளிகூட வாசலில் நின்று மறுபடியும் அந்த வீட்டை நோக்கினாள்.இப்பொழுது நிழலாடியது அவ்வீட்டில்.

காலம் யாருக்கும் வஞ்சகமில்லாது மாற்றத்தை கொடுத்திருக்கிறதே?நீ கூட எப்படி மாறி விட்டாய்!..மழையை வேடிக்கை காண்பிக்க கைகளில் குழந்தையை ஏந்திக்கொண்டு..அட  அது உன் மனைவியா.. அழகாயிருக்காளே!”

அந்நிழல்களை பார்த்து,தானே மனதுக்குள் பேசிக்கொண்டாள்.சாரலின் வேகம் இப்பொழுது அதிகரித்திருந்தது.நீர்த்துளிகள் இப்பொழுது அவளது ஆடையை மட்டுமல்ல,மனதையும் நனைத்தது.வாசனை மண்ணிலிருந்தும்,அவளது நினைவிலிருந்தும் கசியத்தொடங்கின.