Monday, June 29, 2009

விடியலை நோக்கிய ஓர் இரவு...

உஷ்ணம் கலந்த, நீண்ட கரிய சாலைகளை, எனது ஸ்ப்ளெண்டர் விழுங்கிக் கொண்டிருந்தது. எத்தனை சிக்னல்களை விதிமுறையின்றி கடந்திருப்பேன் என்பது ஞாபகத்தில் இல்லை. மாலை நேரத்து எதிர்வெயில் ஹெல்மெட்டின் கண்ணாடிக்குள் புகுந்து கண்ணை உறுத்திற்று. மற்ற நாட்களை விட இன்று அதிகமாய் தலையிலிருந்து வியர்வை கசிந்து, காது மடல்களருகே இறங்கி, உப்பு காற்றை நாசியில் தவழவிட்டது.

ஹெல்மெட்டை கழற்றி எறிந்து விடலாமா? என்று கூட ஒரு நொடி யோசித்தேன். “நேற்றாய் இருந்தால் செய்திருப்பாய்” என்று என்னில் இருந்து ஒரு குரல் என்னை ஏளனம் செய்தது. அதுவும் உண்மைதான். நேற்றுவரை நான் Mr.C.ரமேஷ் சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர். ஆனால் இன்றோ C.ரமேஷ் அன் எம்ப்ளாயி.

பெரிய கம்பெனி என்றில்லாத, ஒரு மத்தியதர மென்பொருள் கம்பெனியில் 3 வருடமாக, நாயாய் நேற்றுவரை உழைத்தவன். அதனால்தான் என்னவோ, நாய்க்கு பிஸ்கட் தூக்கியெறிவது போல, பிங்க் ஸ்லிப் கொடுத்து விரட்டிவிட்டனர். நன்றி கெட்டவர்கள்!

சங்கம் தியேட்டர் கடந்தவுடன்,மெதுவாய் வண்டியை வலப்பக்கம் திருப்பி,நேரு பூங்காவின் வாசலருகே ப்ரேக் பிடித்தேன். ரோஸ்நிற கவுன் போட்ட, இரண்டு வயதையொத்த குழந்தையொன்று, கருப்புநிற சுடிதார் பெண்மணியிடம் பலூன் வாங்கித்தரும்படி கெஞ்சிக்கொண்டிருந்தது. வார நாட்களில் கூட கூட்டம் அதிகமாய் இருப்பதாய் தோன்றியது.முடிந்தமட்டும் வண்டியை ஓரமாய் நிறுத்தி பூட்டிவிட்டு, உள்ளே நடக்க ஆரம்பித்தேன்.

இப்பூங்காவிற்கும் எனக்கும் நிறைய உளவியல் தொடர்புகள் இருப்பதாய் இப்பொழுதுவரை நம்பிக்கொண்டிருக்கிறேன். கடந்த ஐந்துவருட சென்னை வாழ்க்கையில், எந்த சூழலில் அமைந்த பிரச்சனை என்றாலும், இங்கு வந்து சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்லும்போது, மனம் தீர்வை நோக்கி ஓட ஆரம்பிப்பதை கவனித்திருக்கிறேன். வேலை தேடிக்கொண்டிருந்த அந்த ஒருவருட கால கட்டம், இப்பூங்காவில் என்னை நானே உணர்ந்த நாட்கள்.அதனால்தான் என்னவோ, என்னையுமறியாமல் என் உள்மனது, இன்று வண்டியை நேராக இங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது.

புல்தரையை ஒட்டிய பச்சைநிற மரப்பெஞ்சில் உட்கார்ந்தேன்.ரோஸ்கவுன் குழந்தை மஞ்சள் பலூனை உதைத்து விளையாடிக்கொண்டிருந்தது. விட்டு அகலா நிழல்போல, மனம் மதியம் நடந்ததையே அசைபோட்டு அலற்றிக் கொண்டிருந்தது.
“மிஸ்டர் ரமேஷ்! கம்பெனியிலிருந்து உங்களை வேலை நிறுத்தம் செய்வதாய் முடிவெடுத்திருக்கிறோம்.ஐ ஆம் ரியலி வெரி சாரி”
இதற்கு முன்னும் பின்னும் நடந்த சம்பாஷணைகளில் மனம் ஏனோ லயிக்கவில்லை. மனதிலிருந்த திட்டங்கள், சந்தோசங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாம் வழிந்தோடிவிட்டது போல் இருந்தது. ரேஸில் தடுமாறி தலை குப்புற விழும் குதிரையை போல இருந்தது இந்நாள்.

வாசலருகே வந்து, இரண்டு ரூபாய் கொடுத்து வாட்டர் பாக்கெட் வாங்கிக்கொண்டேன். நான் செய்வதையே திரும்ப செய்து கொண்டிருக்கும் நிழலை பார்த்தபடியே, நடந்து சென்று, மறுபடியும் பெஞ்சில் அமர்ந்துகொண்டேன்.
இளம்பெண்கள் ஜாகிங் என்ற பெயரில், மற்றவர்களின் மூச்சழுத்தத்தை அதிகப்படுத்திக்கொண்டிருந்தனர். இன்னும் சிலர் முன்னும் பின்னும் வளர்ந்திருந்த தொப்பையின் அளவை குறைக்க குனிந்து நிமிர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். காதலர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூங்காவை அலங்கரித்துக்கொண்டிருந்தனர்.

குழந்தைகள், பச்சை மஞ்சள் நிற பலூன்களை தூக்கிப்போட்டு வண்ணமயமாய் விளையாடிக்கொண்டிருந்தனர். ரோஸ்கவுன் குழந்தை, பலூனின் கயிற்றை பிடித்து எடுக்க போராடிக்கொண்டிருந்தது.ஒவ்வொரு தடவை கயிற்றை பிடிக்க போகும் போதும், பலூன் நழுவிக்கொண்டிருந்தது.

வாட்டர் பாக்கெட்டை பிரித்து, சிறிது குடித்துவிட்டு.மீதியை முகத்தில் பீய்ச்சிக்கொண்டேன். ஊரிலிருக்கும் அம்மா ஞாபகத்திற்கு வந்தாள்.
“ரமேஷு, வசந்திக்கு போட்ட மாதிரியே, சுமதிக்கும் இருபது பவுன் போட்டுரோம்னு சொல்லிருக்கு..மறந்துடாத..”
“என்னம்மா நீ..இதபோயி ஞாபகபடுத்திகிட்டு..எனக்கு தெரியாதா?”
பொங்கலுக்கு வீட்டிற்கு போனபோது அம்மாவிடம் பேசியது மனதை பிசைந்தது. பழைய நினைவுகளில் சிறிது மூழ்க ஆரம்பித்தேன்.

அப்பா செல்லையா.சொந்தமாக சவரகடை வைத்திருந்தார். நாள் வருமானம் 30 ஐ தாண்டுவதே கஷ்டம். அம்மாவும், பாதியிலே படிப்பை விட்ட இரு தங்கைகளும் வயல் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தினர். நான் விடுதியில் தங்கிப்படிக்கும்போது, வீட்டிற்கு செல்லவே கஷ்டமாயிருக்கும். வறுமையின் சுவட்டை வாரி இறைத்ததைப்போல் இருக்கும் வீடு. ஆனாலும் அம்மா எப்பொழுதும் சிரித்த முகத்துடனே இருப்பாள்.
“நீ ஒரு வேலைக்கு போயிட்டேனா எல்லாம் சரியாகிடும்..நீ அதுல மட்டும் கவனமாயிருப்பு” என்று அடிக்கடி சொல்வாள்.

படித்ததும் உடனே வேலையும் கிடைத்துவிடவில்லை. இந்த சிங்கார சென்னை வந்து ,ஒருவருடம் நண்பர்களின் உணவு,உடை,உறைவிடத்தை பகிர்ந்துகொண்டேன்.இப்பூங்காவிற்கு வரவும் பழகியிருந்தேன்.
ரோஸ்கவுன் குழந்தை இன்னும் நழுவிக்கொண்டிருக்கும் பலூனின் கயிற்றை பிடிக்க போராடிக்கொண்டிருந்தது. கருப்பு சுடிதார் ,நழுவிய பலூனை குழந்தையின் அருகே தள்ளிவிட்டுக்கொண்டிருந்தாள். ஏனோ கயிற்றை மட்டும் குழந்தையின் கையில் கொடுக்கவில்லை.

இரண்டாவது வருட ஆரம்பத்தில், ஒரு சாதாரண கம்பெனியில் 6,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்தது. ஒரு வருடமாய் அற்றுப்போயிருந்த தொடர்பை அன்று புதுப்பித்துக்கொண்டேன் வீட்டில். அதற்கு பிறகு நிறைய மாற்றங்கள். குடிசை ஓடானது, குண்டு பல்ப் டியூப் லைட் ஆனது, கொல்லையில் டாய்லெட் கட்டியது, கடையை வாடகைக்கு விட்டு வீட்டில் பசு கட்டியது, வசந்திக்கு வரன் பார்க்க ஆரம்பித்தது என நிறைய...

8 மாதங்களுக்கு பிறகு, அந்த கம்பெனியை விட்டு, இதோ இன்று பிங்க் ஸ்லிப் கொடுத்த கம்பெனியில், ஆரம்ப சம்பளம் 12,000 க்கு மாறினேன். நான் ஒரு பெரிய நிலைக்கு வந்துவிட்டதாய் வீட்டில் அனைவரும் பூரித்தனர். அம்மாவும் சுமதியும் வயல் வேலைக்கு செல்வதை நிறுத்திக்கொண்டார்கள். வசந்திக்கு 20 பவுன் போட்டு கவர்மெண்ட் வாத்தியாருக்கு கல்யாணம் செய்து கொடுத்தோம். போன தடவை ஊருக்கு சென்றிருந்தபோது, ஊர் கண் பட்டுவிட்டது என்று ராமாயி ஆச்சி எங்கள் நால்வரையும் உட்காரசொல்லி, உப்பு மிளகாய்வத்தல் வைத்து திருஷ்டி கழித்து நெருப்பில் தூக்கி போட்டார். சடசடவென்று வெடிக்கும் சப்தம் கேட்டு “திருஷ்டியெல்லாம் கழிஞ்சிருச்சி புஷ்பா ” என்று அம்மாவை பார்த்து கூறினார்.

“அங்கிள்..அங்கிள்..உங்க காலுக்கு கீழே பலூன் பறந்து வந்துடுச்சி .. எடுத்துக்கவா?”
திடுக்கிட்டு, சிறு புன்னகையுடன் குனிந்து பலூனை எடுத்து அவனிடம் கொடுத்தேன்.
“தாங்க்ஸ் அங்கிள்” பலூனிலிருந்த தூசியை துடைத்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தான்.

ரோஸ்கவுன் குழந்தை இப்பொழுது லாவகமாய் பலூனின் கயிற்றை பிடித்து, தெத்துப்பல் தெரிய, பலூனை போவோர் வருவோர் காலிலெல்லாம் அடித்து , சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது. மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தேன். இனிமேல் என்ன செய்வது? கல்யாணத்திற்கு வாங்கிய லோன் மாதமாதம் கட்டவேண்டும். வண்டி வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட வேண்டும். தங்கியிருக்கும் அறைக்கு வாடகை கட்டவேண்டும். இதைதவிர மாதமாதம் செல்போன் பில் வேறு கட்டவேண்டும்.

இப்படி நிறைய “வேண்டும்” கள் அடுக்கடுக்காய் கண்முன் விரிந்தது.
காலடியில் ஏதோ மெத்தென்றது. ரோஸ்கவுன் குழந்தையின் பலூன்தான். “குனிந்து எடுத்துக்கொடுக்கலாமா” என்று யோசிப்பதற்குள், தன் பிஞ்சுவிரல்களால் லாவகமாய் பலூனின் கயிற்றை பிடித்து, என் கால்களில் அடித்து மகிழ்ந்தது. குழந்தை ஏதோ என்னிடம் சொல்லியதுபோல ஒரு உணர்வு. வெளியே வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.
“நீ ஒரு நல்ல வேலைக்கு போயிட்டேனா எல்லாம் சரியாகிடும்..நீ அதுல மட்டும் கவனமாயிருப்பு” - அம்மாவின் குரல் சுகந்தமாய் எங்கிருந்தோ கேட்பது போலிருந்தது.

இரவின் குளுமையை ரசித்துக்கொண்டே, வண்டியை ரூமை நோக்கி விட்டேன் , விடியலை எதிர்பார்த்து நம்பிக்கையுடன்....


24 comments:

நாமக்கல் சிபி said...

குட் மெசேஜ்!

நம்பிக்கையைத் தளரவிடக் கூடாது என்பதை சொல்கிறது

கார்க்கிபவா said...

சம்பவம் நடக்குமிடம் குறித்த வர்ணனைகளும் சூப்பர். ஆனா அழுத்தமான கதை இல்லையோன்னு தோணுது. ஆங்காங்கே அந்த குழந்தை குறித்து வருவதால் இப்படித்தான் முடிய போகிறது என்று யூகிக்க முடிகிறது.

வாழ்த்துகள்

*இயற்கை ராஜி* said...

குட் கதை:-)

Vidhoosh said...

ஐயோ என்று பதைத்துக்கொண்டே படித்தேன். கடைசியில் :)

Anonymous said...

இப்பூங்காவிற்கும் எனக்கும் நிறைய உளவியல் தொடர்புகள் இருப்பதாய் இப்பொழுதுவரை நம்பிக்கொண்டிருக்கிறேன். கடந்த ஐந்துவருட சென்னை வாழ்க்கையில், எந்த சூழலில் அமைந்த பிரச்சனை என்றாலும், இங்கு வந்து சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்லும்போது, மனம் தீர்வை நோக்கி ஓட ஆரம்பிப்பதை கவனித்திருக்கிறேன். வேலை தேடிக்கொண்டிருந்த அந்த ஒருவருட கால கட்டம், இப்பூங்காவில் என்னை நானே உணர்ந்த நாட்கள்.அதனால்தான் என்னவோ, என்னையுமறியாமல் என் உள்மனது, இன்று வண்டியை நேராக இங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது.//

இவ்வரிகளில் பூங்காவிற்கு பதிலாக தேவாலயத்தைப் பொருத்திப் பார்த்தால் எனது பழைய நாட்கள் நினைவுக்கு வருகிறது.
ரசித்து படித்தேன் இவ்விடுகையை.

Anonymous said...

வோட்டும் போட்டாச்சுங்க...

KARTHIK said...

வேலை கிடச்சுடும்!

R.Gopi said...

//நான் செய்வதையே திரும்ப செய்து கொண்டிருக்கும் நிழலை பார்த்தபடியே//

அசத்தல்.........

//விடியலை எதிர்பார்த்து நம்பிக்கையுடன்....//

தூள் முடிவு........... நம்பிக்கை தானே வாழ்க்கை.....

நல்லா இருந்தது.......... வாழ்த்துக்கள்......

அ.மு.செய்யது said...

எழுத்தில் பக்குவமும்,//சுகந்தமாய்// //லாவகமாய்// போன்ற குறிச்சொற்கள் தேர்ந்த வாசிப்பையும் வெளிப்படுத்துகின்றன.

முடிவில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம்.

நல்ல ஆக்கம்...வாழ்த்துக்கள் !!!

நட்புடன் ஜமால் said...

கொஞ்சமே பெரிதாக இருப்பது போல் தோன்றியது, ஆனால் படிக்க துவங்கியவுடன் முழுதாய் படித்து விட்டுதான் எழு இயன்றது ...


நல்லாயிருக்குங்க

தன்னம்பிக்கை (குழந்தை வடிவில்...)

அப்துல்மாலிக் said...

நல்ல மெசேஜ் கதையில்

கதையோட்டம் சூப்பர்

சொல்லப்பட்ட விதம் அருமை

தொடருங்கள்

Anbu said...

கதை சொல்லப்பட்ட விதம் அருமையாக இருக்கு அக்கா..
நல்ல கருத்து..

தமிழ் அமுதன் said...

நல்ல நடை! நல்ல கதை!! நல்ல கருத்து!!!

ப்ரியமுடன் வசந்த் said...

அம்மணி சாப்ட்வேர் இஞ்சினியரா?

கதை அழகா சென்று கருத்தோட முடியுது......

T.V.ராதாகிருஷ்ணன் said...

\\வாசலருகே வந்து, இரண்டு ரூபாய் கொடுத்து வாட்டர் பாக்கெட் வாங்கிக்கொண்டேன். நான் செய்வதையே திரும்ப செய்து கொண்டிருக்கும் நிழலை பார்த்தபடியே//

super

Admin said...

உங்கள் கதை அருமை தொடருங்கள்...

வெற்றி-[க்]-கதிரவன் said...

//“நீ ஒரு நல்ல வேலைக்கு போயிட்டேனா எல்லாம் சரியாகிடும்..நீ அதுல மட்டும் கவனமாயிருப்பு” - அம்மாவின் குரல் சுகந்தமாய் எங்கிருந்தோ கேட்பது போலிருந்தது.//

இறுதியில் இந்த வரி சூப்பர்....

அந்த குழந்தை, பலூன், முகவரி படத்தில் ஒரு காட்சியில் வரும் சிறுவனை ஞாபகபடுத்தியது.... அது கதையின் சில வரிகளிலேயே தெரிந்தது...

புதுமையோடு பழைமை கலந்த உணர்வு உங்கள் கதை -:)

முடிஞ்சா இங்க வந்து பாருங்க... http://www.maargalithingal.blogspot.com/

Joe said...

நல்ல கதை.

அதிலும் முக்கியமாக, மென்பொருள் பொறியியல் படித்தவர்கள், படித்து முடித்தவுடனே 60,000 மாதச் சம்பளம் பெறுகிறார்கள் என்று புகழ் பெற்ற எழுத்தாளர்கள் கூட புருடா விடும் போது, உண்மை நிலையை அழகா சொல்லிருக்கீங்க.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...பூங்கொத்து ராஜேஸ்வரி!

குடந்தை அன்புமணி said...

போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என்று வலியுறுத்தும் கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

மதிபாலா said...

எல்லா இரவுகளும் விடியலை நோக்கித்தானே போகிறதுன்னு பாலானாந்தா சுவாமிகள் பல்டி அடிக்கிறார்.

தேவன் மாயம் said...

நல்ல கதை!! இலகுவான நடையில் நம்பிக்கை வரிகள்!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல கதை விவரிப்பு, பூங்காவின் சூழல், ரோஸ்கவுன் குழந்தை விவரித்த விதம் அருமை.

அடிக்கடி வரும் அந்த ரோஸ் நிற கவுன் குழந்தை + பலூன் - இவைகளால் கதையின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பது ஊகித்துவிட முடிகிறது,