Thursday, December 5, 2013

அது என்னவென்றால் ...

நீரில் படர்ந்திருக்கும்
தாமரை இலையானாலும்
உள்ளிழுக்கும் கொடிமுள்ளாய்  அது.

விரைந்து ஏறும் படிக்கட்டுக்களில்
தடுமாறி விழவைக்கும்
தடுப்புக் கம்பியாய் அது.

அன்றாட வாழ்வினில்
அள்ளிப் பூசிக்கொள்ளும்
அரிதாரமாய் அது.

துவைத்தபின் ஊற்றிவிடும் நீரில்
அலையாமல் ஒதுங்கி நிற்கும்
அழுக்கைப் போல அது.

கதை முடிக்கும் வேளையில்
கற்பனையை  வற்றவைக்கும்
துயிலெழுப்பும் ஓசை அது.

அடுக்கி வைத்திருக்கும்  ஆடைகளுக்குள்
முறுக்கேறித்  திரியும்
மூட்டைப்பூச்சி அது.

உறவு விடுத்து
மண் மறந்து   விலகி நின்று
காலங்கள் பல ஆனாலும்
கருகும் வாசமாய் அது.

இந்த அதுகளுக்கும்
உங்களுக்கும்  தொடர்பிருந்தால்
நீங்களே அதுக்கு  பெயரிட்டுக்   கொள்ளுங்கள்.